சென்னை: Rohini Theatre (ரோகிணி தியேட்டர்) – அந்த ஊழியருக்கு உடைதான் பிரச்னை என்றால் அவர்கள் அறிய, அடைய வேண்டிய நாகரிகம் தூரத்தில் இருப்பதாக நடிகை ப்ரியா பவானி சங்கர் தெரிவித்திருக்கிறார்.
சில்லுனு ஒரு காதல் பட இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு பத்து தல படத்தில் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் படத்தில் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்திருக்கிறனர்.
நேற்று ரிலீஸான பத்து தல
பத்து தல படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. காலை 5 மணி காட்சி ரத்து செய்யப்பட்டதால் 8 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. சிம்புவை திரையில் பார்ப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் பத்து தல ரிலீஸான திரையரங்குகள் முன் குவிந்தனர். ஆனால் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுவருகிறது. மேலும் கன்னட படம் மஃப்டி போல் இல்லை எனவும் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
டிக்கெட் இருந்தும் நரிக்குறவர்களை உள்ளே விடாத ரோகிணி தியேட்டர்
சென்னையில் இருக்கும் பிரபல திரையரங்கமான ரோகிணி திரையரங்கத்திலும் பத்து தல ரிலீஸானது. நேற்று காலை 8 மணி காட்சியை பார்க்க நரிக்குறவர் இனத்தை சேர்ந்த இரண்டு பெண்களும், ஒரு சிறுவனும் சென்றிருந்தனர். அவர்களிடம் படத்துக்கான டிக்கெட் இருந்தும் தியேட்டருக்குள் அனுமதிக்க ஊழியர் மறுத்துவிட்டார். இதுதொடர்பான வீடியோ நேற்று வெளியாகி பெரும் விவாதத்தை கிளப்பியது.
ரோகிணி தியேட்டர் உரிமையாளரின் விளக்கம்
நிலைமை பூதாகரமானதை உணர்ந்த ரோகிணி தியேட்டரின் உரிமையாளர் நிகிலேஷ் முதலில் அளித்த விளக்கத்தில், “இவ்விவகாரம் நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்ததும் அவர்கள் படம் தொடங்குவதற்கு முன்பே சரியான நேரத்திற்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்” என கூறியிருந்தார். இருந்தாலும் ரோகிணி திரையரங்கம் அவ்வாறு செய்திருக்கக்கூடாது என பலரும் ரோகிணி திரையரங்கத்துக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.
ரோகிணி தியேட்டர் அளித்த மற்றொரு விளக்கம்
அதனைத் தொடர்ந்து அளித்த மற்றொரு விளக்கத்தில், “பத்து தல திரைப்படம் யு/ஏ சான்றிதழ் பெற்ற படம் என்பதால் 2 முதல் 10 வயது குழந்தைகளுடன் வந்தவர்களைத்தான் எங்கள் ஊழியர் தடுத்து நிறுத்தினார். ஆனால் இந்த விஷயத்தை சென்சிடிவ் பிரச்னையாக மாற்ற சிலர் நினைத்தனர்” என குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் யு/ஏ படத்துக்கு சிறுவர்கள் இதுவரை ரோகிணி தியேட்டருக்குள் வந்ததே இல்லையா என ரசிகர்கள் கூறிய் #BoycottRohiniTheatre என்ற ஹேஷ் டேக்கையும் ட்ரெண்ட் செய்துள்ளனர்.
ப்ரியா பவானி சங்கர் ட்வீட்
இந்நிலையில் பத்து தல படத்தில் நடித்திருக்கும் ப்ரியா பவானி சங்கர் இந்த விவகாரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “எல்லாரும் அவங்க வேலைய பார்த்துட்டுப் போறப்போ, ticket இருக்ககுல்ல, ஏன் உள்ள விட மாட்டேங்கிறீங்கன்னனு கேட்ட அந்த குரல் தான் இது போன்ற செயலுக்கு எதிரான முதல் குரல். அவங்க உடைதான் திரையரங்க நிர்வாகிகளுக்கு பிரச்சனைனா, அவரகள் அறிய, அடைய வேண்டிய நாகரிகம் ரொம்ப தூரத்துல இருக்கு” என குறிப்பிட்டுள்ளார்.