புதுடெல்லி: கரோனா தொற்றால் எளிதில் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளவர் கள், கூடுதல் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் நோய்த் தடுப்புக்கான நிபுணர்கள் குழு வெளியிட்டுள்ள வழிகாட்டு தல்களில் கூறியிருப்பதாவது. முதியோர், இணை நோயால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கு உட் பட்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், முன்கள சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோர் கரோனா தொற்றால் எளிதில் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. இவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 6 அல்லது 12 மாதங்களுக்குப் பிறகு கூடுதல் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள வேண்டும்.
கடுமையான நோயை உரு வாக்கும் நடுத்தர ஆபத்தில் உள்ள வர்கள் (இணை நோய் இல்லாத 60 வயதுக்கு உட்பட்டவர்கள், இணை நோய் கொண்ட வளரிளம் பருவத்தினர்) முதல் 2 டோஸுடன் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்வது போதுமானது. என்றாலும் இவர்கள் கூடுதல் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டால் அது பாதுகாப்பானதாக இருக்கும்.
ஆரோக்கியமான குழந்தைகள் மற்றும் 6 முதல் 17 வயதுக்குட்பட்ட வளரிளம் பருவத்தினர் குறைந்த முன்னுரிமை குழுவில் உள்ளனர். எனவே கரோனா தொற்றால் எளிதில் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளவர்கள், கூடுதல் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளி விவரம் வருமாறு. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,995 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9 பேர்உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு 5,30,876 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 16,354 ஆக உயர்ந்துள்ளது. நாடு தழுவிய தடுப்பூசிபணியில் இதுவரை சுமார் 220.66 கோடி டோஸ்கள் செலுத்தப் பட்டுள்ளன. இவ்வாறு சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
முகக் கவசம் அவசியம்
குருகிராம் மெதந்தா மருத்துவ மனையின் மார்பக சிகிச்சை மையத் தலைவர் டாக்டர் அர்விந்த் குமார் கூறியதாவது. கரோனா இரண்டாவது அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்தது. நோயாளிகளுக்கும் ஆக்சிஜன் தேவை இருந்தது. ஆனால் தற்போது நிலைமை அவ்வாறு இல்லை.
கரோனா வைரஸ் மற்றும் புதிய திரிபுகள் நுரையீரலை அதிகம் பாதிப்பதில்லை. வறட்டு இருமல் நீண்ட நாட்களாக இருந்தாலும் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தேவைப்படுவதில்லை. என்றாலும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பொதுமக்கள் முகக்கசவம் அணிவதுடன் அறிகுறிகள் தென்பட்டால் உடனே பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு டாக்டர் அர்விந்த் குமார் கூறினார்.