திமுக ஆட்சி காலத்தில் காவிரி – வைகை – குண்டாறு இணைக்கப்படும்: பேரவையில் அமைச்சர் துரைமுருகன் உறுதி

சென்னை: திமுக ஆட்சிக்காலத்தில் காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு பணிகளை முடித்தே தீருவோம் என்று அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில், நேரமில்லாநேரத்தில், காவிரி – வைகை -குண்டாறு இணைப்பு திட்டப்பணிகளை விரைவுபடுத்துவது குறித்து அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இதில், அதிமுக உறுப்பினர் சி.விஜயபாஸ்கர் பேசும்போது, ‘‘7 மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பான இத்திட்டத்தை செயல்படுத்த கடந்த அதிமுக ஆட்சியில், ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பிடப்பட்டு, ரூ.6,441 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்பின் ரூ.700 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, இரண்டு பிரிவுகளாக ரூ.311 கோடிக்கு ஒப்பந்தம் கோரப்பட்டு, திட்டத்தை அப்போதைய முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். ஆனால், தற்போது நில எடுப்பு மற்றும் திட்டப்பணிகள் மந்தமாக நடைபெறுகிறது’’ என்றார்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: இந்தத் திட்டத்தை செயல்படுத்த நீங்கள் மட்டும் சிந்திக்கவில்லை. இந்தத் திட்டத்தை தேசிய நீர்வள குழுமம் (என்டபிள்யூடிஏ) முதலில் மகாநதி – குண்டாறு எனத் தொடங்கியது. அதன்பின் அந்தத் திட்டத்தை செயல்படுத்த இயலாது என்பதால் இரண்டாக பிரிக்கப்பட்டு மகாநதி – கோதாவரி மற்றும் கோதாவரி – குண்டாறு என பிரிக்கப்பட்டது.

இத்திட்டத்தை செயல்படுத்த தாமதமாகும் என்பதால், மாநிலத்தில் காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டு, மாயவனூர் பகுதியில் கதவணை கட்ட ரூ.165 கோடியை அப்போதைய முதல்வர் கருணாநிதி ஒதுக்கி இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்பின், நீங்கள் வந்ததும் தொகை ரூ.254 கோடியாக உயர்த்தப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது.

காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு நிலம் எடுக்க நீங்கள் 2020-ல் ரூ.600 கோடி ஒதுக்கினீர்கள். அதில் ரூ.34.31 கோடி செலவிடப்பட்டது. மீதமுள்ள பணத்தை அரசு திருப்பி எடுத்துக் கொண்டது. இதன்மூலம் 71.60 ஏக்கர் நிலம் மட்டுமே எடுக்கப்பட்டது. தற்போது திமுக ஆட்சியில் 2021-22, 22-23-ம் ஆண்டுகளில் ரூ.312 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 698.97 ஏக்கர் நிலம் எடுக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள பணம் அப்படியே துறையில் டெபாசிட் செய்யப்பட்டு, தேவைப்படும்போது நிலம் எடுக்க பயன்படுத்தும்படி முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதவிர 2023-24-ல் நிலம் எடுப்புக்கு ரூ.554.7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நிலம் எடுப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கால்வாய் வெட்டும் பணிக்கு 2020-21-ல் நீங்கள் பணம் ஒதுக்கவில்லை. நாங்கள் வந்த பின் 2021-22-ல் ரூ.177.9 கோடி ஒதுக்கப்பட்டு 64 சதவீதம் கால்வாய் அமைக்கும் பணிகள் முடிவுற்றுள்ளன. இந்த 2023-24-ம் ஆண்டுக்கு ரூ.111.5 கோடி ஒதுக்கப்பட்டு, கால்வாய் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த ஆட்சிக் காலத்தில் காவிரி- வைகை – குண்டாறு இணைப்பு பணிகளை நிச்சயம் முடிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.