மதுரை : பெருங்காமநல்லூரில் உள்ள வீர தியாகிகள் நினைவிடத்தில் அதிமுகவினர் நாளை அஞ்சலி.!
பல்வேறு சட்ட போராட்டங்களுக்குப் பிறகு அ.தி.மு.கவின் நிரந்தர பொதுச்செயலாளராக எந்த வித போட்டியும் இன்றி எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை அதிமுகவினர் மாபெரும் வெற்றியாக கருதி பட்டாசுகள் வெடித்து பிரமாண்டமாகக் கொண்டாடினர்.
இந்த நிலையில் அ.தி.மு.க கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்து இருப்பதாவது:- “மதுரை மாவட்டத்தில் உள்ள பேரையூர் தாலுகா பெருங்காமநல்லூரில் கடந்த 1920-ம் ஆண்டில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பதினேழு பேர் வீரமரணம் அடைந்தனர்.
உயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திடும் வகையில், நாளை காலை 9 மணிக்கு அப்பகுதியிலுள்ள வீர தியாகிகள் நினைவிடத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, அமைப்பு செயலாளர் ராஜன் செல்லப்பா, மதுரை மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் செல்வம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த உள்ளார்கள்.
அதனைத்தொடர்ந்து சமூக செயற்பாட்டாளரும், முன்னாள் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.வுமான பி.கே.மூக்கையா தேவரின் 101-வது பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 4-ந்தேதி காலை 9 மணிக்கு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் உள்ள மூக்கையா தேவர் நினைவிடத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்த உள்ளனர்.
இதற்கான அணைத்து ஏற்பாடுகளையும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மேற்கொண்டு வருகிறார்” என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.