அமெரிக்கா, ரஷ்யாவைப் போல அதிகார தேசமில்லை இந்தியா: ஆர்எஸ்எஸ் தலைவர் 

நாக்பூர்: அமெரிக்கா, ரஷ்யாவைப் போல இந்தியா அதிகார தேசமில்லை. நம் தேசம் எப்போதும் அடுத்தவருக்கு சேவை செய்வதைப் பாரம்பரியமாகக் கொண்டுள்ளது. வேத காலத்தில் இருந்தே அது தொடர்கிறது என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறினார்.

நாக்பூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வேத் சன்ஸ்கிரித் ஞான் கவுரவ் சமரோஹ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.அப்போது அவர் பேசியதாவது: அமெரிக்கா, ரஷ்யாவைப் போல இந்தியா அதிகார தேசமில்லை. நம் தேசம் எப்போதும் அடுத்தவருக்கு சேவை செய்வதைப் பாரம்பரியாகக் கொண்டுள்ளது. வேத காலத்தில் இருந்தே அது தொடர்கிறது.

வளர்ந்த நாடுகள் தங்கள் அதிகாரத்தை மற்ற நாடுகள் மீது பிரயோகப்படுத்துகின்றன. சோவியத் அதிகாரமிக்க நாடாக இருந்தபோது மற்ற நாடுகளை ஆட்டிப்படைத்தது. ஆனால் அதை அமெரிக்கா அப்புறப்படுத்தியது. இப்போது சீனா அமெரிக்காவை அப்புறப்படுத்த முயல்கிறது. அமெரிக்கா, ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளுக்குமே உக்ரைன் வெறும் பகடைக் காய் தான். ஆனால், இந்தியா எப்போதும் உதவியை எதிர்பார்த்திருக்கும் நாடுகளுக்கு உதவுகிறது. அந்த வகையில் உக்ரைனுக்கும் உதவ விரும்புகிறது.

அண்மையில் இலங்கைக்கு இந்தியா பெருமளவில் உதவிகளைச் செய்தது. இலங்கை எப்போதுமே சீனா அல்லது பாகிஸ்தானின் பக்கமே துணை நின்றுள்ளது. மேலும், தன் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியாவின் எவ்வித ஈடுபாட்டையும் இலங்கை ஊக்குவித்ததில்லை. ஆனால் அந்நாடு மோசமான நிதி நெருக்கடிக்கு ஆளானபோது இந்தியாதான் உதவியது. அதற்காக இந்தியா ஒருபோதும் இலங்கையை ஆட்டுவிக்க நினைக்காது.

இந்தியா தற்போது தனது மத நம்பிக்கைகளை நிலைநிறுத்தும் பாதையில் முன்னேறிச் செல்கிறது. மதத்தைப் பேணும் நாடு மற்ற நாடு மீது ஆதிக்கம் செலுத்தாது.

அறிவியல் மதத்தை இழிவுபடுத்துகிறது. செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி நாளை மனித குலத்திற்கே சவாலாகும் என்று அஞ்சப்படுகிறது. மனித இனமே இல்லாமல் கூட போகும் சூழல் உருவாகலாம். அறிவியல் மனிதனை வெறும் ஒரு உயிரியல் விலங்காகத்தான் கருதுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.