கர்நாடக தமிழர்களின் வாக்குகள்… பாஜக பிளான் இதுதான்… பெங்களூருவில் அண்ணாமலை பளீச்!

பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, 113 மேஜிக் நம்பர். ஆனால் இதுவரை பாஜக தனிப் பெரும்பான்மை பெறவில்லை. இம்முறை கர்நாடக மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். பாஜகவை மீண்டும் பெரும்பான்மையுடன் கொண்டு வர வேண்டும் என விரும்புகிறார்கள். இதற்காக நாங்கள் எதுவும் ஆபரேஷன் செய்யவில்லை. அந்த அளவிற்கு பிரதமர் மோடி வேலை செய்திருக்கிறார். மாநில அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியுள்ளது. தற்போது அடைந்துள்ள வளர்ச்சி பெரிதும் உறுதுணையாக இருக்கும்.

கர்நாடக தமிழர்கள்

எந்த ஒரு தலைவரையும் நாங்கள் ஒதுக்கவில்லை. மாநிலத் தலைவர் முதல் தேசிய தலைவர் வரை அனைவரையும் முன்னிறுத்தி தான் தேர்தலை முன்னெடுத்து செல்கிறோம். கர்நாடகாவில் பல்வேறு காலகட்டங்களில் தமிழர்கள் வந்து குடியேறியுள்ளனர். இதில் சாதாரண தொழிலாளர்கள் முதல் ஐடி முதலாளிகள் வரை பலரும் அடங்குவர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கிறது. தமிழர்களை மையப்படுத்திய பிரச்சினை என்பது காவிரி விவகாரத்தின் போது எழும்.

காவிரி சிக்கலுக்கு தீர்வு

2018ல் காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்த பிறகு எந்தவித சிக்கலும் வரவில்லை. இது கர்நாடக தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. வரும் 27ஆம் தேதிக்கு பின்னர், தமிழகத்தை சேர்ந்த பாஜக தலைவர்கள் பலர் இங்கே வந்து பிரச்சாரம் செய்யவுள்ளனர். 13 நாட்கள் இங்கேயே முகாமிட்டு ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் சென்று வாக்கு சேகரிக்கவுள்ளனர். பெங்களூருவில் மட்டுமே 12 தொகுதிகளுக்கும் மேல் தமிழர்கள் பெரும்பான்மை மக்களாக இருக்கின்றனர்.

புலிகேசி நகரில் அதிமுக

இவர்கள் அனைவரையும் பாஜக குழுக்கள் நேரில் சந்தித்து பிரச்சாரம் செய்து வருகிறோம். கர்நாடகாவில் 224 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இதில் புலிகேசி நகரில் மட்டும் அதிமுக வேட்பாளரை நிறுத்தியது பற்றி நீங்கள் அந்த தலைவர்களிடம் தான் கேட்க வேண்டும். அதுவும் பாஜக வாய்ப்பளித்த ஒரு தமிழனை எதிர்த்து ஏன் நிறுத்தினீர்கள் என்று கேளுங்கள்.

தமிழ்வழிப் பள்ளிகள்

தமிழர்கள் போட்டியிட அதிக வாய்ப்புகள் வழங்காதது பற்றிய கேள்விக்கு, புலிகேசி நகரில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதை ஆராய்ந்து சீட் கொடுக்கப்பட்டுள்ளது. நிறைய தலைவர்கள் அமைப்பு ரீதியாக பல்வேறு பொறுப்புகளில் இருக்கின்றனர். சிவாஜி நகர் தொகுதியில் போட்டியிடும் சந்திராவும் ஒரு தமிழர் தான். யார் வெற்றி பெற்றாலும் அவர்கள் கர்நாடக பாஜகவிற்கு தான் வேலை செய்வர். போதிய அளவில் மாணவர்களின் எண்ணிக்கை இல்லாத காரணத்தால் தமிழ் வழிப் பள்ளிகள் மூடப்பட்டன.

புதிய கல்விக் கொள்கை

மீண்டும் பள்ளிகளை திறப்பதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. முதலில் தாய் மொழியில் கற்க ஆர்வம் காட்ட வேண்டும். அடுத்து போதிய எண்ணிக்கையில் மாணவர்கள் சேர வேண்டும். கர்நாடகாவில் புதிய கல்விக் கொள்கை அமலில் இருக்கிறது. இதன்மூலம் மூன்றாவது மொழியாக தமிழ் படிக்க முடியும். இது அடுத்த சில ஆண்டுகளில் முழு வீச்சில் பயன்பாட்டிற்கு வந்துவிடும். அப்போது தமிழ் படிக்க போதிய வசதிகள் கிடைக்கும் என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.