கொல்கத்தாவை பந்தாடிய சென்னை..! 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!!

16-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் கடந்த 31-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஐபிஎல் தொடரின் 33வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் , கான்வே களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் அதிரடி காட்டினர். நிலைத்து ஆடி ரன்கள் சேர்த்த இருவரும் தொடக்க விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்தனர். பின்னர் ருதுராஜ் கெய்க்வாட் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ரஹானே களமிறங்கினார்.

கான்வே, ரஹானே இணைந்து பவுண்டரி, சிக்ஸர்கள் விளாசினர். கான்வே அரைசதம் அடித்த நிலையில் 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷிவம் துபே, ரஹானேவுடன் இணைந்து சிக்ஸர்கள் பறக்க விட்டார். இருவரும் இணைந்து பந்துகளை நாலாபுறமும் சிக்சருக்கு பறக்க விட்டனர். ரஹானே 24 பந்துகளிலும் துபே 21 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர்.

பின்னர் 50 ரன்களில் துபே ஆட்டமிழந்தார். ரஹானே அதிரடியை தொடர்ந்து சிக்ஸர்கள் பறக்க விட்டார். இதனால் இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் குவித்தது. ரஹானே 71 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். கொல்கத்தா அணி சார்பில் கெஜ்ரோலியா 2 விக்கெட்களையும் வருண் சக்கரவர்த்தி, சர்மா தலா 1 விக்கெட்களையும் எடுத்தனர்.

இதையடுத்து 236 ரன்கள் இமாலய இலக்குடன் கொல்கத்தா அணியின் ஜெகதீசன், சுனில் நரேன் களம் இறங்கினர். இதில் சுனில் நரேன் ரன் எடுக்காமலும், ஜெகதீசன் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ரானா, வெங்கடேஷ் ஐயர் இணைந்து விளையாடினர். 

 பின்னர் வெங்கடேஷ் ஐயர் 20 ரன்களும், நிதிஸ் ராணா 27 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் ஜேசன் ராய் சிறப்பாக விளையாடினார். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட அவர் அரைசதம் அடித்தார். அதன்பின்னர் 61 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன் பின்னர் கொல்கத்தா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

மறுபுறம் நிலைத்து ஆடி ரிங்கு சிங் அரைசதம் அடித்தார். இறுதியில் கொல்கத்தா 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. இதனால் சென்னை அணி வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பில் துஷார் தேஷ்பான்டே, தீக்ஸனா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்த வெற்றியினால் 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் சென்னை முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.