எடப்பாடிக்கு சிக்கல்.. சொத்து விவரங்களில் தவறு.. விசாரணை அறிக்கையை சமர்ப்பித்த குற்றப்பிரிவு போலீஸ்!

சேலம் : தேர்தல் பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்களை மறைத்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது தொடரப்பட்ட வழக்கில் விசாரணை அறிக்கையை சேலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது குற்றப்பிரிவு காவல்துறை.

2021 சட்டமன்ற தேர்தலில் தாக்கல் செய்த பிராமண பத்திரத்தில் சொத்து விவரங்களை மறைத்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது. சொத்து விவரங்கள் தவறாக இருப்பதாக விசாரணை அறிக்கையில் குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சொத்துப் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் வேட்பு மனுவுடன் சமர்ப்பித்தார். அந்த தகவல் உண்மையில்லை என்றும், எடப்பாடி பழனிசாமி தனது சொத்துகளை குறைத்துக் காட்டியுள்ளார் எனவும் சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வேட்பு மனுவில் தவறான தகவல் தெரிவித்தது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக சேலம் போலீசார் தகவல் தெரிவித்தனர். குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சேலம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதன் அடிப்படையில் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஒரு மாதமாக விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி வங்கி கணக்கு, அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள், படிப்பு போன்றவை குறித்து விரிவாக விசாரணை மேற்கொண்டனர்.

இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி முறையிட்டிருந்தார். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி மீது சொத்து விவரங்களை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணை அறிக்கையை சேலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது மத்திய குற்றப்பிரிவு காவல்துறை.

எடப்பாடி பழனிசாமி தனது பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்களை தவறாக தாக்கல் செய்துள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்துள்ள விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.