வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை புன்னியஸ்தலத்தை புனிதபூமியாக பிரகடனப்படுத்தும் சன்னஸ் பத்திரம் ஜனாதிபதியால் கையளிப்பு

புனித பூமியின் புனரமைப்புப் பணிகளில் இணைந்து கொண்ட ஒரே ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே – விஹாராதிபதி தேரர் தெரிவிப்பு.

வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை விகாரை வளாகத்தை புன்னியஸ்தலமாக பிரகடனப்படுத்தும் ஸ்ரீ சன்னஸ் பத்திரத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மகாவிஹார வங்சிக்க ஷ்யாமோபாலி மஹா நிகாயவின் அஸ்கிரி தரப்பின் சிரேஷ்ட காரக சங்க உறுப்பினர், வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை ரஜமஹா விகாரையின் விஹாராதிபதி மஹோபாத்யாய வண. உருலேவத்தே தம்மரக்கித்த தேரரிடம் கையளித்தார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை விகாரையின் புனரமைப்புப் பணிகளில் பங்கேற்ற சுதந்திர இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற வகையில் நேற்று (28) பிற்பகல் மஹியங்கனை விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, விஹாராதிபதி உருலேவத்தே தம்மசித்தி தேரரை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் விகாரையில் மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டார்.

மெத் சவிய ஸ்தாபகர் வானியலாளர், கொழும்பு பல்கலைக்கழக பௌதீகவியல் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தலைமையில் “மெத் சவிய மனநலக் கற்கை கருணைச் சங்கத்தின்” மூலம் வில்லுவ குளத்தின் நடுவில் நிர்மாணிக்கப்பட்ட சுமார் 102 அடி உயரமுடைய புத்தர் சிலை திறந்து வைக்கும் முகமாக நினைவுப் பலகையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திறைநீக்கம் செய்தார்.

மஹியங்கனை ரஜமஹா விகாராதிபதி மஹோபாத்யாய உருலேவத்தே தம்மரக்கித தேரர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நன்றியுணர்வாக நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கி வைத்தார்.

இப்புனித நிகழ்வில் வரவேற்புரை நிகழ்த்திய மஹியங்கனை ரஜமஹா விகாராதிபதி , வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை புனித பூமியின் புனரமைப்புப் பணிகளில் இணைந்து கொண்ட ஒரே ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே என்று தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த தேரர்,

இரண்டு மன்னர்கள் மஹியங்கனை விகாரையின் புனரமைப்புப் பணிகளில் தலைமையேற்று செயற்பட்டனர். அது துட்டகைமுனு மன்னன் மற்றும் முதலாம் விஜயபாகு மன்னன். பின்னர் டி.எஸ்.சேனநாயக்க பிரதமராக இருந்த காலத்தில் அதன் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்த நாட்டை எட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகள் ஆட்சி செய்த போதிலும், மஹியங்கனை புனிதஸ்தல புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வருகை தந்த ஒரே ஒரு நிறைவேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே.மஹியங்கனை விகாரை வளாகத்தை புன்னியஸ்தலமாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானியை வெளியிட்டவர் நீங்கள்தான். இதுவரை, மஹியங்கனை விகாரைக்கு புனித நகர வர்த்தமானியே இருந்தது என்றார்.

மகாசங்கத்தினர்,எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ஷ, நிமல் சிறிபால டி சில்வா, விதுர விக்ரமநாயக்க, இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில், இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் திருமதி ஹோ தி தன் ட்ரூக், (Ho Thi Thanh Truc ) வேடுவத் தலைவர் உருவரிகே வன்னிலெத்தோ, வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா, பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மற்றும் பாதுகாப்புப் படைகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அதிதிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.