அசோக் கெலாட் – சச்சின் பைலட் இணைந்து ராஜஸ்தான் தேர்தலை எதிர்கொள்வார்கள்: காங்கிரஸ்

புதுடெல்லி: ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலை அசோக் கெலாட்டும் சச்சின் பைலட்டும் இணைந்து எதிர்கொள்வார்கள் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.

ராஜஸ்தானில் வசுந்தராராஜே சிந்தியா தலைமையிலான கடந்த ஆட்சியில், அரசுப் பணிகளை வழங்குவதில் ஊழல் நடந்ததாகப் புகார் எழுந்தது. இது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும், ராஜஸ்தான் பப்ளிக் சர்வீஸ் கமிஷனை முழுமையாக கலைத்துவிட்டு மறுசீரமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வருகிறார். அவரது கோரிக்கை ஏற்கப்படாததால், முதலில் ஜெய்ப்பூரில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதையடுத்து, கோரிக்கையை வலியுறுத்தி நடைப்பயணம் மேற்கொண்டார்.

நடைபயணத்தின் இறுதியில் தான் முன்வைக்கும் 3 கோரிக்கைகள் மீது ராஜஸ்தான் அரசு இம்மாத இறுதிக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை மேற்கொள்ளப் போவதாக சச்சின் பைலட் எச்சரித்திருந்தார்.

ராஜஸ்தானில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சிக்குள் பிரச்சினை அதிகரித்திருப்பதைக் கருத்தில் கொண்டு இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் தலைமை முடிவு செய்து, அவர்களை டெல்லிக்கு அழைத்திருந்தது.

அசோக் கெலாட்டும் சச்சின் பைலட்டும் நேற்று டெல்லி வந்து கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோரைச் சந்தித்தனர். முதலில், அசோக் கெலாட்டிடம் சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர் சச்சின் பைலட் அந்த பேச்சுவார்த்தையில் இணைந்தார். பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி, வேணுகோபால், “4 மணி நேரம் ஆழமான விவாதம் நடைபெற்றது. ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலை அஷோக் கெலாட்டும், சச்சின் பைலட்டும் இணைந்து எதிர்கொள்வார்கள் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இரு தலைவர்களும் இதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். கோரிக்கைகளை கட்சி மேலிடத்திடம் விட்டுவிடுவது என்ற திட்டத்தையும் அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்” என தெரிவித்தார்.

எனினும், அவர்களின் கோரிக்கைகள் குறித்து வெளியிட அவர் மறுத்துவிட்டார். ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராக சச்சின் பைலட்டும் முதல்வர் வேட்பாளராக அஷோக் கெலாட்டும் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அசோக் கெலாட், “கட்சித் தலைமை உறுதியாக உள்ளது. யாரும் ஒரு குறிப்பிட்ட பதவியை வலியுறுத்தி பெற முடியாது. அதுபோன்ற ஒரு வழக்கம் காங்கிரஸ் கட்சியில் இதற்கு முன்பும் இல்லை; இனியும் இருக்காது” என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.