17 ஆண்டுகளில் 50 படங்களைத் தொட்ட அஞ்சலி

திரையுலகப் பயணத்தைப் பொறுத்தவரையில் நடிகர்களுக்குத்தான் நீண்ட காலம் பயணிக்கும் வாய்ப்பு கிடைக்கும். நடிகைகளைப் பொறுத்தவரையில் அவர்கள் எவ்வளவு உச்சத்தில் இருந்தாலும், திருமணம் செய்து கொண்ட பின் அவர்களது பயணம் திசை மாறிவிடும். கதாநாயகியாக நடிக்கக் கூப்பிடாமல் அக்கா, அண்ணி கதாபாத்திரங்களில் நடிக்கக் கூப்பிடுவார்கள். கடந்த சில வருடங்களாகத்தான் அந்த நிலை மாறியிருக்கிறது. திருமணத்திற்குப் பின்பும் கதாநாயகிகளாக அவர்கள் நடிக்கும் நிலை வந்துவிட்டது.

இந்த போட்டி யுகத்தில் ஒரு நடிகை 50 படங்களைத் தொடுவதென்பது சாதாரண விஷயமல்ல. வெற்றி, தோல்விகள் கதாநாயகர்களை அதிகம் பாதிக்காது. அதே சமயம் கதாநாயகிகளைக் கொஞ்சம் பாதிக்கும். 60 வயதைக் கடந்த நடிகர் என்றாலும் 20 பிளஸ் வயது நடிகைகளுடன் ஜோடி போட்டு நடிப்பதைத்தான் விரும்புவார்கள். எனவே, ஒரு நடிகை 50 படங்களைத் தொடுவது அவர்களைப் பெருமைப்படுத்தும் ஒரு விஷயமாக அமைகிறது. அப்படி ஒரு பெருமையைத் தொட அஞ்சலிக்கு 17 வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது.

நமது பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றம், கிளாமர் காட்டி நடிக்காத நடிகை என அஞ்சலியைச் சொல்லலாம். தெலுங்கில் 2006ல் வெளிவந்த 'போட்டோ' படத்தில் அறிமுகமானவர். தமிழில் 2007ல் வெளிவந்த 'கற்றது தமிழ்' படத்தின் மூலம் அறிமுகமானார். அதற்குப் பிறகு பல படங்களில் நடித்திருந்தாலும் “அங்காடித் தெரு, எங்கேயும் எப்போதும், அரவான், கலகலப்பு, இறைவி, தரமணி, பேரன்பு” ஆகிய படங்களில் அவரது கதாபாத்திரமும், நடிப்பும் பேசப்பட்டது. தற்போது தமிழில் ராம் இயக்கத்தில் 'ஏழு கடல் ஏழு மலை' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். தெலுங்கில் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்து வருகிறார்.

அவரது 50வது படமாக 'ஈகை' என்ற படம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தை அசோக் வேலாயுதம் இயக்க, தரண் குமார் இசையமைக்கிறார்.

நயன்தாரா, த்ரிஷா ஆகியோர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருகிறார்கள். அவர்கள் அளவிற்கு பரபரப்பாகப் பேசப்படவில்லை என்றாலும் அவர்களைத் தொடர்ந்து இத்தனை வருடங்களாக திரையுலகில் நீடித்து வருகிறார் அஞ்சலி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.