இலங்கைக்கு இந்திய அரசு வழங்கிய கடன் தொகைக்கான காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு

கொழும்பு,

இந்தியான் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையில் கடந்த ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அங்கு பெட்ரோல், டீசல், மருந்து, உணவு பொருட்களின் விலை கடுமையாக உயரந்து பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகினர்.

இதனிடையே இலங்கைக்கு இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பொருளாதார உதவிகளை அளித்தன. இந்தியா மொத்தம் ரூ.32 ஆயிரத்து 800 கோடி கடன் அளித்தது. அவற்றில் ஒரு பகுதியாக, ரூ.8 ஆயிரத்து 200 கோடி கடன் அளிக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு மார்ச் மாதம், பாரத ஸ்டேட் வங்கிக்கும், இலங்கை அரசுக்கும் இடையே கையெழுத்தானது.

இந்த கடனின் கால அளவு 2024-ம் ஆண்டு மார்ச் மாதம்வரை ஆகும். இருப்பினும், பொருளாதார நெருக்கடியில் இருந்து இன்னும் மீளாத இலங்கை, மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க பணம் தேவைப்படுவதால், மேற்கண்ட கடன் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்குமாறு வேண்டுகோள் விடுத்தது. இந்தியாவும் அதை ஏற்றுக்கொண்டு, ரூ.8 ஆயிரத்து 200 கோடி கடனை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது.

இதுதொடர்பான திருத்த ஒப்பந்தம், இலங்கை மந்திரி சினேகன் சேமா முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. இதன்மூலம், இந்தியா அளித்த கடன்தொகையை அத்தியாவசிய பொருட்கள் வாங்க இலங்கை மேலும் ஓராண்டு காலத்துக்கு பயன்படுத்த முடியும் என்று இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.