சிவகங்கை: “மத்திய அரசின் பல திட்டங்கள் அறிக்கையாகத்தான் உள்ளன. ஆனால், நடைமுறைக்கு வருவதில்லை.அதுபோலவே ரயில்வேயில் ‘கவாச்’ பொருத்தும் அறிவிப்பும்” என கார்த்தி சிதம்பரம் எம்.பி சாடியுள்ளார்.
சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், “ஒடிசாவில் நடைபெற்ற ரயில் விபத்து வருத்தமளிக்கிறது. இது பாதுகாப்பு குறைபாட்டால் நடந்திருக்கலாம் என அஞ்சுகிறோம். அரசு ஆழமான விசாரணையை நடத்த வேண்டும். புல்லட் ரயில் போன்ற பிரதமரின் கனவுத் திட்டங்களை விட, மக்கள் பாதுகாப்பை மையப்படுத்தும் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். தண்டவாளத்தின் தரத்தை சரி செய்வது, தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு பணியாளர் காலிப் பணியிடங்களை நிரப்பது போன்றவைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
உலக அளவில் பிரதமர் தன்னை முன்னிறுத்தும் திட்டங்களை கைவிட்டு மக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். ரயில் ஓட்டுநர்கள் 12 மணி நேரத்துக்கு பதிலாக 18 மணி நேரம் பணி செய்கின்றனர். பல ரயில்வே கிராசிங்குகளில் பணியாளர்களே இல்லை. பல பணியிடங்களுக்கு ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கின்றனர்.
வேகமாக ரயில் ஓட்ட வேண்டும் என்பதற்காக பாதுகாப்பை கவனிப்பதில்லை. ரயில் பயண நேரத்தை குறைத்துவிட்டோம் என்று பெருமை பேசவே ரயில் வேகத்தை அதிகப்படுத்துகின்றனர். மேலும், மத்திய அரசின் பல திட்டங்கள் அறிக்கையாகத்தான் உள்ளன. ஆனால், நடைமுறைக்கு வருவதில்லை. அதுபோலதான் ரயில்வேயில் ‘கவாச்’ பொருத்தும் அறிவிப்பும். தொழில்நுட்பட முறையில் விசாரணை நடத்த வேண்டும். உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் கூறுகிறேன். காயமடைந்தவர்கள் குணமடைய வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இழப்பீடுகளை அதிகப்படுத்த வேண்டும். மேலும் இதில் அரசியல் பேச விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார். | வாசிக்க > ரயில் விபத்துகளை தடுக்க உதவக் கூடிய ‘கவாச்’ தொழில்நுட்பம் என்றால் என்ன? – ஒரு தெளிவுப் பார்வை