ஒடிசா ரெயில் விபத்து – ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் இரங்கல்

நியூயார்க்,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில் என 3 ரெயில்கள் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே கடந்த 2-ந்தேதி இரவு சுமார் 7 மணியளவில் விபத்தில் சிக்கின.

இந்த கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்திருப்பதோடு, பலரும் படுகாயம் அடைந்து பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உலக தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஒடிசாவில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், இந்திய மக்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாகவும், படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.