அசுர வேகத்தில் பைக்குகளில் பறக்கும் இளைஞர்கள்: அச்சத்தில் மதுரை வாகன ஓட்டிகள்

மதுரை: மதுரையில் சில இளைஞர்கள் அசுர வேகத்தில் பைக்குகளில் பறப்பதால் விபத்துகள் ஏற்படுவதை அடுத்து மதுரை வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.

“இளைஞர்களே விலையுர்ந்த பைக்குகள் உங்களுக்கு சொந்தமானதுதான். அதற்காக விதியை மீறி ஒன்றுக்கும் மேற்பட்டோரை ஏற்றிக்கொண்டு பயணிக்கும்போது, தவறி விழுந்தால் நீங்கள் மட்டுமின்றி எங்களது உயிருக்கும் ஆபத்து ஏற்படுமே” என பிரதான சாலைகளில் பயணிக்கும் மதுரை வாகன ஓட்டிகள் தினமும் முணுமுணுக்கும் வார்த்தை இது.

அந்த வகையில், மதுரை மாநகரில் அதிக குதிரை சக்தி கொண்ட இரு சக்கர வாகனங்களில் சாகசம் புரிவது அதிகரித்துள்ளது. இந்த சாகச நிகழ்வை இன்ஸ்டராகிராம், வாட்ஸ் ஆப், பேஸ்-புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிட்டும், நண்பர்களுக்குள் பகிர்ந்து மகிழ்ச்சி கொள்கின்றனர். இது போன்ற விபரீத விளையாட்டுக்களை நேரில் பார்க்கும் பள்ளி , கல்லூரி மாணவர்களும் அதிக குதிரை சக்தி கொண்ட இருசக்கர வாகனங்கள் மீது மோகம் கொள்கின்றனர். அவர்கள் தங்களது பெற்றோரிடம் நச்சரித்து விலை உயர்ந்த பைக்குகளை வாங்குகின்றனர்.

ஒரே மகன் என்ற நிலையில் இருக்கும் இளைஞர்கள், தங்களின் பெற்றோரை நச்சரித்து வாங்க வைக்கின்றனர். வேறு வழின்றி பெற்றோரும் வாங்கி கொடுக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். ஏதாவது விபத்தில் சிக்கும்போதுதான் உணரும் சூழல் ஏற்படுகிறது.

இந்நிலையில், மதுரை மாநகரில் விலையுர்ந்த பைக்குகளில் சாலைகளில் பறப்பது, ஹீரோயிசம் காட்டுவது நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. குறிப்பாக மதுரை கேகே.நகர், அண்ணாநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் வைகை வடக்கு, தெற்கு கரை சாலைகள், நத்தம் மேம்பாலம் போன்ற சாலைகளில் அசுர வேகத்தில் சிட்டாக பறக்கின்றனர். ஒருவருகே உத்தரவாதமின்றி, பின்னால் அமர்ந்து செல்லுவோருக்கும் எப்படி உத்தரவாதம் இருக்க முடியும்.

இப்படியாக தினம் தினம் இவர்களின் அட்டகாசத்தால் சாலைகளில் வாகனங்களில் பயணிப்போர் தங்களது உயிரை பணயம் வைத்து செல்லவேண்டியுள்ளது. அசுர வேகத்தில் செல்வது மட்டுமின்றி சர்க்கஸ் போன்று பைக்கின் முன்சக்கரத்தை அலாக்காக தூக்கிக் கொண்டு சாகசம் புரிகின்றனர்.

இதை நேரில் பார்க்கும் வாய்ப்பை பெறும் பள்ளி, கல்லூரி இளைஞர்களும் நாமும் இது போன்ற பைக்களை வாங்கி ஓட்டலாமே என, மனதில் தவறான எண்ணத்தை வளர்க்கின்றனர். இது ஒருபுறம் இருந்தாலும், மற்றொருபுறம் மதுரையில் சவ ஊர்வலகளில் செல்வோரும், மது அருந்திவிட்டு சாலையில் வாகனங்களில் செல்லும் இளைஞர்களும் தங்களது இரு சக்கர வாகனங்களை தாறுமாறாகவே ஓட்டுகின்றனர். இவர்களால் சாலையில் சரியாக செல்வோரும் விபத்துகளில் சிக்கும் சூழல் உருவாகிறது. பைக் ரேஸ், குடித்துவிட்டு அதிவேகத்தில் வாகனங்களை ஓட்டுவோர் மீது காவல் துறையினரின் நடவடிக்கை எடுக்கின்றனர்.

கடந்த 2 மாதத்தில் மட்டும் பைக் ரேஸ் சாகசம் தொடர்பாக 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், மதுரை சாலைகளில் பைக் ரெய்டு அட்டகாசம் செய்யும் இளைஞர்களை அடக்கி ஒடுக்கவேண்டும் என, வாகன ஓட்டிகள், மக்கள் காவல் துறையினருக்கு முன் வைக்கும் கோரிக்கையாகவே உள்ளது.

போக்குவரத்து காவல் உதவி ஆணையர்கள் கூறுகையில், ”மதுரையில் முக்கிய சாலைகளில் பைக் ரேஸ், அதிவேகம், மது குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவோரை தடுக்க, சிறப்பு ரோந்து படைகள் ஆங்காங்கே போடப்பட்டுள்ளது. குறிப்பாக நத்தம் மேம்பாலம் உள்ளிட்ட இடங்களிலும் இரவு 10 மணி வரை போலீஸார் வாகனங்களில் ரோந்து செல்கின்றனர். நெடுஞ் சாலை ரோந்து போலீஸாரும் கண்காணிக்கின்றனர். சிசிடிவி கேமராக்கள் மூலமும் விதிமீறும் வாகனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆபத்தை ஏற்படுத்தும் பயணம் என்ற வகையில் ரூ. 1000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

‘பைக் ரேஸ்’ குறித்து நண்பர்களுக்குள், சமூக வலைத்தளங்களில் வீடியோ பகிர்வை கண்காணித்து சட்டம், ஒழுங்கு போலீஸார் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கின்றனர். பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு வேண்டும். அதிக குதிரை சக்தி கொண்ட வாகனங்கள் தங்களது பிள்ளைகளுக்கு வாங்கி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். முதலில் வாங்கி கொடுத்துவிட்டு, விபத்துகளில் சிக்கிய பிறகு உணர்கின்றனர். பெற்றோர் கஷ்டத்தை பிள்ளைகளும் உணர வேண்டும். முக்கிய சாலைகளில் ‘பைக் ரேஸ்’ தடுக்க , நடவடிக்கையை காவல் துறையினர் தீவிரப்படுத்தினால் பதட்டத்தில் எங்காவது ஓட்டிச் சென்று மோதி ஆபத்து நேரிடும் பட்சத்தில் அதற்கு காவல் துறையினரே பதிலளிக்கவேண்டிய நிலை உள்ளது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.