ஒடிஷா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.
கடந்த 2 ஆம் தேதி பாலசோரில் 2 பயணிகள் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் மோதி நேரிட்ட விபத்தில் 278 பேர் பலியானதுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சிக்னல் தொடர்பான மின்னணு இண்டர்லாக்கிங்கில் வேண்டுமென்றே இடையூறு ஏற்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று ரயில்வே அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியதை அடுத்து வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து, வழக்கு தொடர்பாக எஃப்.ஐ.ஆரை மீண்டும் பதிவு செய்துள்ள சி.பி.ஐ., விசாரணை நடத்த 10 பேர் அடங்கிய அதிகாரிகள் குழு ஒன்றை நியமித்துள்ளது.
உடனடியாக விசாரணையை துவங்கிய அவர்கள், ஒடிஷாவின் பஹாநஹாவில் விபத்து நடந்த தண்டவாளங்கள், சிக்னல் அறை உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று விபத்துக்குக் காரணம் மனிதத் தவறா, நாசவேலையா என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தவிர, ரயில்வேயும் விபத்து குறித்து தனியாக விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.