திருப்பத்தூர் : ரயில்வே சிக்னலை உடைக்க முயன்ற இளைஞரால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் சிக்னலில் அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
ஒடிசாவில் 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 1000ற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததோடு, 280க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த ரயில் விபத்தின் கடுமையான பாதிப்புக்கு சிக்னல் கோளாறே காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டின் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ரயில்வே நிலையத்தில் உள்ள ரயில்வே சிக்னலில் இன்று திடீரென அதிர்வு ஏற்பட்டது. இதனை அறிந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.
அப்போது திருப்பத்தூர் நகர் பகுதியைச் சேர்ந்த கோகுல் (30) என்ற இளைஞர், குடிபோதையில் ரயில்வே சிக்னலை உடைக்க முற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அந்த இளைஞரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து ரயில்வே பாதுகாப்பு படை டிவிஷன் செக்யூரிட்டி கமிஷனர் சவ்ரோகுமார், ரயில்வே இருப்புப் பாதை டிஎஸ்பி பெரியசாமி, திருப்பத்தூர் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் போலீசார் கோகுலிடம் விசாரணை மேற்கொண்டனர்.
முதல் கட்ட விசாரணையில், கோகுல் குடிபோதையில் சிக்னல் கம்பத்தின் மீது கற்களை விசியது தெரியவந்துள்ளது. தனது காதலி தன்னிடம் பேசாமல் இருந்ததால், விரக்தியில் ஆத்திரமடைந்து ரயில்வே சிக்னல் கம்பத்தின் மீது கற்களை வீசியதாக கோகுல் தெரிவித்துள்ளார்.
சிக்னல் உடைக்கப்பட்டதை கவனிக்காமல் இருந்தால் பெரும் அசம்பாவிதம் நேர்ந்திருக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிக்னல் கோளாறு காரணமாக ஒடிசாவில் ரயில் விபத்து ஏற்பட்டு சுமார் 280 பேர் பலியாகியுள்ள நிலையில், திருப்பத்தூர் ரயில்வே நிலையத்தில் சிக்னல் உடைப்பு முயற்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.