இளையராஜாவின் காலில் விழுந்து ஆசி பெற்ற அண்ணாமலை!

இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாள் சில தினங்களுக்கு முன்பு கொண்டாடப்பட்ட நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்கள். இந்த நிலையில், தமிழக பா.ஜ.,வின் தலைவரான அண்ணாமலை இளையராஜாவை நேரில் சந்தித்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதோடு இளையராஜாவின் காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார்.

இதையடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தியில், இன்று மாலை இசைஞானி இளையராஜா அவர்களது இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. திருவாசகத்தை சிம்பொனி வடிவில் தந்து நம் மனதை இசையால் உருக்கிய கலைத்தாயின் தலைமகனை தரிசித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். காலங்கள் கடவுள் பாடும் ராகங்கள் என்ற கவிஞர் கண்ணதாசன் வரிகளை இசைஞானி அவர்களது இசை இன்னும் பல நூறு தலைமுறைகளுக்கும் மெய்ப்பிக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. மொழி இனப் பாகுபாடு இன்றி மக்களின் எல்லாவித உணர்வுகளுக்குமான தீர்வாக விளங்கும் இசை கடவுள் எங்கள் ராகதேவன் இளையராஜா அவர்கள் நீண்ட காலம் தமது இசையால் நம் அனைவரையும் ஆற்றுப்படுத்த வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார் அண்ணாமலை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.