அறங்காவலர்களாக அரசியல்வாதிகள் இருக்கக் கூடாது.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. ஏற்கெனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக, மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கும் பணி 34 மாவட்டங்களில் நடந்து வருவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அனைத்து கோயில்களிலும் அறங்காவலர்களை நியமிக்கும் நடைமுறையை முடிக்க ஓராண்டு அவகாசம் தேவை எனவும், ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டும் 560 கோயில்களுக்கு தமிழக அரசே அறங்காவலர்களை நியமிக்கும் எனவும் அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது

அப்போது, அரசியல் சார்பற்றவர்களை அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்த நிலையில் அறங்காவலர் நியமனத்துக்கான விண்ணப்பத்தில் அரசியல் சார்பு குறித்த எந்தக் கேள்வியும் இடம்பெறவில்லை என்று மனுதாரர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதற்கு, விண்ணப்பிப்பவர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவரா, இல்லையா என்ற கேள்வி விண்ணப்பத்தில் இடம்பெறும் என்று அறநிலையத்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

ஆனால் அறங்காவலர் பதவிக்கான விண்ணப்பங்களில் அரசியல் சார்பு குறித்த கேள்வி இடம்பெறவில்லை. இது குறித்து வழக்கு விசாரணையின் பொழுது விளக்கம் அளித்த அறநிலைத்துறை  தெய்வ பக்தி கொண்டவர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தால், அவரை அறங்காவலராக நியமிக்கலாம் என இந்த நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருந்ததால் அந்த கேள்வி இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதனால் கடுப்பான உயர் நீதிமன்ற நீதிபதிகள் “இறை பக்தி இல்லாத எவரையும் கோயில் அறங்காவலர்களாக நியமிக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அறங்காவலர் பதவிக்கான விண்ணப்பத்தில், விண்ணப்பதாரர்களின் அரசியல் சார்பு குறித்த கேள்வியை கண்டிப்பாக சேர்க்க வேண்டும். அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான மாவட்ட அளவிலான குழுக்களின் நியமனம் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” என்று அறநிலையத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைத்தனர்.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் கோவில் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும். அரசியல் விருப்பங்களின் அடிப்படையில் மட்டுமே அறங்காவலர்களை நியமிக்க கூடாது. கோவில் அறங்காவலர்களாக அரசியல்வாதிகளை நியமிப்பதை தவிர்க்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.