ஆஸி. வீரர்கள் 5 பேர் இடதுகை பேட்ஸ்மென்கள்: அஸ்வினை தேர்வு செய்யாதது ஏன்? – தேர்வுக்குழுவை விமர்சிக்கும் நெட்டிசன்கள்

லண்டன்,

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. துவக்க வீரர் குவாஜா (0) ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். மற்றொரு துவக்க வீரரான வார்னர் 43 ரன்னில் அவுட் ஆனார். அடுத்துவந்த லபுஷேன் 26 ரன்னில் அவுட் ஆனார். ஆஸ்திரேலிய அணி 76 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்த விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

அதிரடியாக ஆடிய டிராவிஸ் ஹெட் சதம் விளாசினார். ஸ்மித் அரைசதம் விளாசினார். இறுதியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் குவித்துள்ளது. டிராவிஸ் ஹெட் 146 ரன்களுடனும், ஸ்டீவ் ஸ்மித் 95 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இடம்பெறவில்லை. இந்திய அணியில் அஸ்வின் இடம்பெறாததற்கு நெட்டின்சன்கள் கடும் விமர்சனம் செய்துள்ளனர்.

ஆஸ்திரேலிய பேட்டிங்கில் 5 இடதுகை பேட்ஸ்மென்கள் இருக்கும்போது இடதுகை பேட்ஸ்மென்களுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசும் அஸ்வின் இந்திய அணியில் இடம்பெறாததற்கு பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்து வருகின்றனர். டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் உலகின் நம்பர் 1 வீரராக உள்ள அஸ்வின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் அணி தேர்வு குழுவுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்திய அணி அஸ்வினை தேர்வு செய்யாததால் ஏற்படும் விளைவு குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக ரிக்கி பாண்டிங் கூறுகையில், முதல் இன்னிங்ஸ் விளையாடுவதற்கான அணியை மட்டும் தேர்வு செய்துள்ள இந்தியா அணி பொறிக்குள் சிக்கிவிட்டது. ஆட்டத்தின் 3வது மற்றும் 4வது நாளில் இந்தியா அஸ்வினை கட்டாயம் இழந்திருக்கும்’ என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.