ஒடிசா ரயில் விபத்து.. இஸ்லாமியருக்கு எதிராக வதந்தி பரப்பிய பாஜக ஆதரவாளர் கைது.. கதறி அழுதததால் பரபரப்பு

சென்னை:
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக மத வெறுப்புணர்வையும், கலவரத்தையும் தூண்டும் வகையில் வதந்தி பரப்பிய கன்னியாகுமரியை சேர்ந்த பாஜக ஆதரவாளர் செந்தில்குமார் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

ஒடிசாவில் கடந்த வாரம் நிகழ்ந்த ரயில் விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. இந்த விபத்தில் இதுவரை 290 பேர் இறந்துள்ளதாகவும், 600-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயத்தில், பலி எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் எனவும் ஒருதரப்பு தெரிவிக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, இந்த ரயில் விபத்தை வைத்து சிலர் சமூகத்தில் ஒருவித குழப்பத்தையும், பிரச்சினையையும் ஏற்படுத்த முயன்று வருகின்றனர். இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அதற்குள்ளாக சில விஷமிகள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்து வதந்தி பரப்பி வருகிறார்கள்.

அந்த வகையில், கன்னியாகுமரியைச் சேர்ந்த பாஜக ஆதரவாளரான செந்தில் குமார் என்பவர் சமூக வலைதளங்களில் இதுபோன்ற விஷமத்தனமான வதந்திகளை பரப்பி வந்தார். அதில், “ஒடிசா விபத்து ஏற்பட இஸ்லாமியரான ஸ்டேஷன் மாஸ்டர் தான் காரணம். வேண்டுமென்றே தவறான சிக்னலை கொடுத்து விபத்தை ஏற்படுத்திவிட்டு இப்போது அவர் தலைமறைவாகிவிட்டார்” என உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவலை பதிவிட்டிருந்தார்.

மேலும், ஒரு முஸ்லிம் ஸ்டேஷன் மாஸ்டரின் புகைப்படத்தையும் அவர் போஸ்ட் செய்திருந்தார். செந்தில் குமார் போட்ட இந்த செய்தியை வைத்து சிலர் இஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து பதிவிட தொடங்கினர். இதனால் சமூக வலைதளங்களில் இருதரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, இதுதொடர்பாக போலீஸில் சிலர் புகார் அளித்தனர். இதன் பேரில், மத வெறுப்புணர்வை தூண்டுதல், கலவரத்தை உருவாக்குதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், செந்தில்குமாரை கைது செய்தனர். இந்நிலையில், அவரை கைது செய்து போலீஸ் ஜீப்பில் ஏற்றிய போது அவரும், அவரது குடும்பத்தினரும் கதறி அழுதனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.