சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டுவந்த விவகாரம்: உரிமைக்குழுவின் மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி

சென்னை: சட்டப்பேரவைக்குள் குட்கா பொருட்களைக் கொண்டு வந்ததாக அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களுக்கு எதிராக உரிமைக்குழு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு தமிழக அரசு,குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு தடை விதித்தது. தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்களை 2017-ம் ஆண்டு சட்டப்பேரவைக்கு எடுத்து வந்து காண்பித்ததாக, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 19 திமுக எம்எல்ஏக்கள் மீது உரிமை மீறல் பிரச்சினை எடுக்கப்பட்டு,பேரவை உரிமைக் குழு மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 19 திமுக எம்எல்ஏக்களும் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த 2017-ம் ஆண்டு அனுப்பப்பட்ட நோட்டீஸ் நடைமுறையில் அடிப்படைத் தவறுகள் உள்ளதாகக்கூறி, நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டது. பேரவை உரிமைக்குழு இரண்டாவது முறையாக அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தனி நீதிபதியும், நோட்டீஸை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

இதையடுத்து தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, 2021ம் ஆண்டு சட்டபேரவை உரிமைக்குழு மற்றும் பேரவை செயலாளர் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 17 திமுக எம்எல்ஏக்களும், பாஜகவில் இணைந்த கு.க.செல்வமும் பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த மேல் முறையீட்டு வழக்கு நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி தனபால் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் சிலம்பண்ணன் மற்றும் ரவீந்திரன் ஆகியோர் ஆஜராகி, “இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்க வேண்டுமென வலியுறுத்த விரும்பவில்லை” என்று தெரிவித்தனர்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், உரிமைக்குழு நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டிருந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.