வீடியோ கேம்ஸ் மூலம் வளரிளம் பருவத்தினர் மதமாற்றம் – உ.பி.யில் மவுலானா கைது; முக்கிய குற்றவாளி தலைமறைவு

புதுடெல்லி: வளரிளம் பருவத்தினர் வீடியோ கேம்ஸ் பதிவிறக்கம் செய்து விளையாடுவது அதிகரித்து வருகிறது. இச்சூழலை சாதகமாக்கி, சமூகவிரோதிகள் சிலர் ஃபோர்ட் நைட், டிஸ்கார்டு போன்ற பல பெயர்களில் பக்குவமாகப் பேசி அவர்களை மூளைச் சலவை செய்வதாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்களில் ஒன்று கடந்த வாரம் முதன்முதலாக உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தலைநகர் டெல்லிக்கு அருகிலுள்ள காஜியாபாத்தின் கவி நகர் காவல் நிலையத்தில் கடந்த மே 30-ம் தேதி ஒருவர் அளித்த புகாரில், தனது மகன் கிஷோர் சமீப காலமாக தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அவரை சிலர் வீடியோ கேம்ஸ் மூலம் இஸ்லாம் மதத்திற்கு மாற்றிவிட்டதாகவும் கூறியிருந்தார்.

உடற்பயிற்சி செய்யும் பெயரில் கிஷோர் 5 வேளையும் அருகில் உள்ள மசூதிக்கு சென்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இப்புகார் மீது விசாரணை நடத்திய காஜியாபாத் போலீஸாருக்கு பல அதிர்ச்சியானத் தகவல்கள் கிடைத்துள்ளன. இதன்படி, ‘யங்பிளே வேர்ல்டு’ என்ற பெயரில் ஒரு யூடியூப் சேனல் பாகிஸ்தானிலிருந்து வெளியாகி வருகிறது. இதில் சில வீடியோ கேம்ஸ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது. இவற்றில் விளையாடுவோருக்கு ரொக்கப் பரிசும் அனுப்பப்படுகிறது. இந்த விளையாட்டில் ஒரு கட்டத்திற்கு மேல் வெற்றி பெறுவதற்கு இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குர்ஆனை படிக்கும்படி கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, அந்த நபர் இஸ்லாத்திற்கு மதமாற்றம்செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் காஜியாபாத் மாநகர காவல் துணை ஆணையர் நிபுன் அகர்வால் கூறும்போது, “இந்த விளையாட்டில் தோல்வி அடைவோரிடம் குர்ஆன் படித்து அதில் நம்பிக்கை வைத்தால் வெற்றி பெறலாம் என அறிவுறுத்தப்படுகிறது. தொடர்ந்து, இஸ்லாமிய மதபோதகர்கள் ஜாகீர் நாயக், தாரீக் ஜமால் ஆகியோரின் உரைகளையும் கேட்க வலியுறுத்திய பிறகு அவர்களை மதமாற்றம் செய்கின்றனர். இது இந்தியாவின் பல மாநிலங்களிலும், ஐரோப்பிய நாடுகளிலும் வளரிளம் பருவத்தினர் இடையே பிரபலமாகி வருகிறது” என்று தெரிவித்தார்.

வளரிளம் பருவத்தை சேர்ந்த கிஷோரிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து காஜியாபாத் சஞ்சய் நகர், 23-வது செக்டார் மசூதியின் மவுலவி அப்துல் ரஹ்மான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் முக்கியக் குற்றவாளியான பதோ என்று அழைக்கப்படும் ஷாநவாஸ் மக்ஸுத் கான் தலைமறைவாகி விட்டார். இவரை மகாராஷ்டிரா போலீஸாருடன் இணைந்து உ.பி. போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

குஜராத்தில் 400 பேர் மதமாற்றம்: கிஷோரிடம் இருந்து வெளியான தகவலின்படி, ஹரியாணா, பஞ்சாப் மற்றும் சண்டிகரை சேர்ந்த 4 வளரிளம் பருவத்தினரையும் மதமாற்றம் செய்யும் முயற்சி நடைபெற்றதாக தெரியவந்துள்ளது. குஜராத்திலும் சுமார் 400 பேர் இந்தக் கும்பலால் மதமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காஜியாபாத் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.