வேலூரை மிரட்டிய திடீர் புயல்.. கனமழை.. தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன காரணத்தை பாருங்க..

வேலூர்:
வேலூரில் காலை முதல் வெயில் பின்னியெடுத்த நிலையில், மாலையில் அப்படியே வானிலை தலைகீழாக மாறி கனமழை கொட்டியது. அப்போது திடீரென பயங்கர வேகத்தில் புயல் காற்று வீசியதால் வேலூர் மக்கள் சற்று பீதியில் ஆழ்ந்தனர். இந்நிலைியல், இந்த திடீர் புயலுக்கான காரணத்தை தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருக்கிறார்.

கோடை வெயிலை காலம் காலமாக குத்தகைக்கு எடுத்ததை போல அம்மாவட்டத்தை வெயில் சுட்டெரிப்பது ஒன்றும் புதிதல்ல. அதனால் வெயிலுக்கு மிகவும் பழக்கப்பட்ட வேலூர் மக்களே இந்த கோடையில் துவண்டு போய்விட்டனர். அந்த அளவுக்கு கொடூரமான வெப்பம் வேலூரை வாட்டி வதைத்து வந்தது. சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் அவ்வப்போது கோடை மழை வந்து மக்களுக்கு ஆறுதல் அளித்தது. ஆனால், இந்த முறை வேலூரில் கோடை மழையும் பெரிதாக பெய்யவில்லை.

இதுபோன்ற சூழலில், இன்று காலையும் வழக்கம் போலவே வெயில் மண்டையை பிளந்து வந்தது. இந்நிலையில், திடீரென மாலையில் வானிலை முற்றிலுமாக மாறி கருமேகங்கள் திரண்டு வந்து வேலூரை மூடியது. பின்னர் சிறிது நேரத்தில் மேகங்கள் உடைந்ததை போல மழை கொட்ட தொடங்கியது. வேலூர், சத்துவாச்சாரி, வள்ளலார் சர்க்கிள், கிரீன் சர்க்கிள், கலெக்டர் அலுவலகம், புதிய பேருந்து நிலையம், காட்பாடி, விருபாட்சிபுரம் உட்பட பல இடங்களில் பலத்த மழை பெய்தது.

பின்னர் சிறிது நேரத்தில் பெரும் இறைச்சலுடன் புயல் காற்று வீசியது. புயல் காற்றால் சாலைகளில் இருந்த இருசக்கர வாகனங்கள் விழுந்தன. சில வீடுகளின் மாடியில் இருந்த ஷீட்டுகள் பறந்தன. இந்த திடீர் புயலால் வேலூர் மக்கள் பீதியில் ஆழ்ந்தனர். சுமார் ஒரு மணிநேரம் இவ்வாறு புயலும் மழையும் வேலூரை வெளுத்தெடுத்து.

இந்நிலையில், வேலூரில் புயல் வீசிய வீடியோவை தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு மேலே, “வேலூரில் இந்த பருவத்துக்கான வெப்பச்சலன புயல்களில் இதுவும் ஒன்று. வேலூர் கண்காணிப்பு மையத்தின் கணக்கீட்டின்படி இன்று மாலை 5.30 மணி வரை மட்டும் 55 மி.மீ. மழை பதிவாகி இருக்கிறது” என அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.