கலைமாமணி விருதாளர்களுக்கு இலவச பஸ் பாஸ் – மும்முடிச்சோழன் நாடக விழாவில் எஸ்.வி.சேகர் கோரிக்கை

சென்னை: கலைமாமணி விருதாளர்களுக்கு அரசுப் பேருந்துகளில் வாழ்நாள் முழுவதும் இலவச பஸ் பாஸ் அளிக்க கோரப்பட்டுள்ளது. இதே கோரிக்கையை நேற்று நடந்த மும்முடிச்சோழன் நாடக விழாவில் நடிகர் எஸ்.வி.சேகர் எழுப்பினார்.

முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் கொண்டாடி வருகிறது. இதன்சார்பில் மூன்றாவது நிகழ்ச்சியாக நேற்று மாலை சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில், ‘மும்முடிச்சோழன்’ நாடக அரங்கேற்றம் நடைபெற்றது.

இதன் துவக்க விழா, மன்றத்தின் தலைவரும் நடிகருமான வாகை சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக நாடகம் மற்றும் திரைப்பட நடிகரான எஸ்.வி.சேகரும் கலந்து கொண்டார்.

இவ்விழாவில் நடிகர் எஸ்.வி.சேகர் பேசியதாவது: இந்த மேடையில் நான் ஒரு கலைஞனாக வந்திருக்கிறேன். எனது இவ்வருகை பற்றிய செய்தி என்னாவாக செல்லும் என்பது எனக்கு தெரியாது.

ஆனால், நான் எங்கு இருந்தாலும் அந்த இடத்திற்கு நேர்மையாகவும், எனது கொள்கையை விட்டுக் கொடுக்காமலும் இருப்பேன். அதேசமயம், மாற்றுக் கருத்துள்ளவர்களுடனும் நண்பராக இருப்பது தான் எனது வெற்றிக்கு காரணம். எனக்கு நாடகம், சினிமாதான் தொழில். அரசியல் என்பது சமூகசேவை செய்ய அங்கீகாரம் உள்ள ஒரு இடம். இந்த மன்றத்தில் நான் சுமார் ஆயிரம் முறை நாடகக் காட்சிகள் நடத்தியுள்ளேன்.

இந்தியாவின் எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் தமிழகத்தில் நாடகக் கலைஞர்கள் சிறப்பாக உள்ளனர். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தில் தலைவர், செயலாளர் உள்ள இம்மேடையில் ஒரு கோரிக்கை வைக்க விரும்புகிறேன்

கலைமாமணி விருதாளர்களுக்கு தம் வாழ்நாள் முழுவதிலும் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய பாஸ் வழங்க வேண்டும். இதற்காக தமிழக அரசிடம் சிபாரிசு செய்யும்படி தலைவரை நான் கேட்டுக் கொள்கிறேன். இதில் அறுபது வயதிற்கும் மேற்பட்டவர்கள் இருப்பின் அவர்களுடன் ஒருவரை துணைக்கு அழைத்துச் செல்லும்படியும் பாஸ் அளிக்கப்பட வேண்டும்.

இதற்குமுன் அங்கீகரிக்கப்பட்ட நாடகக் கலைஞர்களுக்கு வெளியூர்கள் செல்ல பேருந்துகளின் கட்டணத்தில் கட்டணம் குறைப்பு அளிக்க இயல் இசை நாடக மன்றம் பரிந்துரையின் பேரில் இருந்தது. இதை மீண்டும் தமிழகம் முழுவதிலும் நாடகக் கலைஞர்கள் பயணம் செய்து நாடகம் நடத்த அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் நாடகக்கலை மேலும் செழித்து வளரும். இவ்வாறு அவர் பேசினார்.

நடிகர் எஸ்.வி.சேகரின் கோரிக்கைக்கு தனது உரையில் பதிலளித்து பேசிய மன்றத்தின் தலைவர் வாகை சந்திரசேகர், ‘எனது 40 ஆண்டு கால நண்பன் எஸ்.வி.சேகர் தனது கோரிக்கையை இதற்கு முன்பும் என்னிடம் வலியுறுத்தி உள்ளார். இதை நிச்சயமாக முதல்வர் முன் வைத்து நிறைவேற்ற ஆவண செய்வோம்’ எனக் குறிப்பிட்டார்.

இவ்விழாவிற்கு வந்தவர்களை, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் விஜயா தாயன்பன் வரவேற்று பேசினார். இந்த வரலாற்று நாடகத்திற்கு சிறப்பு அழைப்பாளராக செவாலியே டாக்டர்.வி.ஜி.பி.சந்தோஷம் கலந்து கொண்டார்.

இந்த நாடகம், முனைவர்.வைத்தீஸ்வரனின் யேகாஷாரம் டிரஸ்டின் சென்னை டிராமாஸ் நடத்தி இருந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக, தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தென் சென்னை தொகுதி எம்பியான முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநரான அவ்வை அருள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.