நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா மற்றும் தொழிலதிபர் வணங்காமுடி என்பவரது மகன் விசாகன் தம்பதிக்கு கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடந்தது.
இந்தத் தம்பதிக்கு 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. தங்களது குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என்று பெயர் சூட்டினர்.


இந்நிலையில் விசாகன் குடும்பத்தின் குல தெய்வக் கோயிலான கோவை சூலூர் பகுதியில் உள்ள மீனாட்சியம்மன் கோயிலில் குழந்தைக்கு மொட்டை அடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டனர். இதை முன்னிட்டு கோயில் வளாகத்தில் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகளுடன் சௌந்தர்யா ரஜினிகாந்த் குடும்பத்தினர் சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.


கோயில் அருகே சௌந்தர்யா உள்ளிட்ட ரஜினி குடும்பத்தினர் பயன்படுத்துவதற்காக ஒரு கேரவனும் நிறுத்தப்பட்டிருந்தது.
அதைத்தொடர்ந்து ஓர் நட்சத்திர விடுதியில் நெருங்கிய உறவினர்களுக்கு மதிய விருந்து அளிக்கப்பட்டது. மொட்டை அடிக்கும் நிகழ்ச்சிக்காக விசாகன் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் தம்பதி தங்களது குழந்தையுடன் கடந்த இரண்டு நாள்களாக கோவையில் முகாமிட்டு விழா ஏற்பாடுகளை கவனித்து வந்தனர்.

இந்த நிகழ்ச்சிக்காக தனது மனைவி லதாவுடன், கோவை விமானநிலையம் வந்த ரஜினிகாந்துக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.