புதுடெல்லி,
நாடு முழுவதும் இன்று ‘இந்தி மொழி நாள்’(இந்தி திவாஸ்) கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1949-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந்தேதி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்கீழ், இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி ஏற்றுக்கொள்ளப்பட்டதை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் ‘இந்தி மொழி நாள்’ கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு மத்திய மந்திரி அமித்ஷா ‘இந்தி மொழி நாள்’ வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“இந்திய நாட்டின் மொழிகள் மற்றும் பேச்சு வழக்குகளுக்கு இடையே ஒரு பாலமாக இந்தி செயல்படுகிறது. தேசிய ஒற்றுமையை மேம்படுத்துவதோடு, தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் ஆராய்ச்சியின் மொழியாகவும் இந்தி மாறி வருகிறது. சுதந்திரப் போராட்டம் முதல் எமர்ஜென்சி நாட்கள் வரை, நாட்டின் குடிமக்களை ஒன்றிணைப்பதில் இந்தி முக்கிய பங்கு வகித்துள்ளது. அனைத்து மொழிகளையும் இணைத்து, வளர்ந்த, மொழியியல் ரீதியாக தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதில் இந்தி தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.