தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சென்னை சிவானந்தா சாலையில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தவாக, விசிக போன்ற கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர். அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசப்பட்டவை.

சட்டமன்ற உறுப்பினர் எழிலன் பேசுகையில், ”தேர்தலுக்கு முன்பாக Summary Intensive Revision என வைப்பார்கள். இறந்தவர்களின் பெயரை நீக்குவதற்காக அதைச் செய்வார்கள். ஆனால், SIR என்பது இந்திய வரலாற்றிலேயே இல்லாதது. பீகாரில் 65 லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. 2002 இன் வாக்காளர் பட்டியலை வைத்து SIR நடத்துகிறார்கள். அதன்பிறகு 9 தேர்தல்களில் இந்த மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.
இவர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க முயல்வது பாசிச அணுகுமுறை. வாக்காளர்களின் பெயர்களை வைத்து கூட்டு கூட்டாக நீக்குகிறார்கள். சிறுபான்மையினரின் வாக்குகளைக் காப்பாற்றுவது இந்த மதச்சார்பற்ற கூட்டணியின் கடமை’ என்றார்.
டி.கே.எஸ் இளங்கோவன் பேசுகையில், ‘தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுப்பதிலேயே முதல் முறையாக ஊழலைச் செய்தது பாஜகதான்.
மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டு அவர்களுக்கு யார் தேவையோ அவர்களுக்கு வாக்கை கொடுப்பதுதான் இந்த SIR.
ஆட்சி யார் நடத்த வேண்டும் என்பதை வாக்காளர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.
அந்த உரிமையையே நம் மக்களிடமிருந்து பறிக்கிறார்கள்.

பீகாரிலிருந்து 65 லட்சம் வாக்காளர்கள் வெளியேறியிருப்பதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. அதில் ஆறரை லட்சம் பேர் தமிழ்நாட்டுக்கு வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஏன் மற்ற மாநிலங்களுக்கு அவர்கள் செல்லவில்லையா? அதை ஏன் வெளியிடவில்லை? அதைக் காரணமாக வைத்து தமிழ்நாட்டில் SIR யைக் கொண்டு வர வேண்டும் என்கிற திட்டத்தோடு செய்திருக்கிறார்கள்.
SIR பற்றி ராகுல் காந்தி கேள்விகேட்டால் தேர்தல் ஆணையம் பதில் சொல்வதில்லை. பாஜக பதில் சொல்கிறது. தலைவர் ஸ்டாலின் கேள்வி கேட்டால் எடப்பாடி பழனிசாமி பதில் சொல்கிறார். இதிலிருந்தே நீங்கள் புரிந்துகொள்ளலாம்’ என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில், ‘தேர்தல் ஆணையத்துக்கு எதிராக இதற்குமுன் போராட்டம் நடந்ததே இல்லை. தேர்தல் ஆணையத்தை மோடி உருவாக்கவில்லை. அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கியது. பிரதமர், உச்சநீதிமன்ற உச்சநீதிமன்ற நீதிபதி, எதிர்க்கட்சி உறுப்பினர் ஆகியோரை உள்ளிடக்கிய குழுதான் முன்பு தேர்தல் ஆணையரைத் தேர்வு செய்யும். மோடி இதை மாற்றினார். உச்சநீதிமன்ற நீதிபதியை அந்தக் குழுவிலிருந்து நீக்கிவிட்டு அவர் நியமிக்கும் அமைச்சர் அந்தக் குழுவில் இடம்பெறலாம் என கொண்டு வந்தார். அவர்கள் விரும்புபவரை தேர்தல் ஆணையராக கொண்டு வரவே இந்த முறை. எதிர்க்கட்சி உறுப்பினருக்கு அதில் குரலே இருக்காது.

தேர்தல் ஆணையம் அதன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது. வாக்காளர்களாக யார் இருக்க வேண்டும் கூடாது என்பதை ஒன்றிய அரசு தீர்மானிக்கிறது.கட்சிகளை உடைத்து ஆட்சியைப் பிடித்தவர்கள், இப்போது பாஜகவுக்கு வாக்களிக்காதவர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கும் முடிவுக்கு வந்துவிட்டார்கள்.
1952 லிருந்து இப்படியொரு அராஜகம் நடந்ததில்லை.பாஜகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் டெல்லியிலும் வாக்களிக்கிறார், பீகாரிலும் வாக்களிக்கிறார். அது எப்படி நடக்க முடியும்? ஒரே வீட்டில் 500 வாக்காளர்கள் இருப்பதாக பதிவு செய்திருக்கிறார்கள். அது எப்படி சாத்தியம்? எங்கள் கட்சிகளின் வாக்காளர்களுக்காக மட்டும் போராடவில்லை. அதிமுகவின் உறுப்பினர்களுக்காகவும் அவர்களின் வாக்காளர்களுக்காகவும்தான் போராடுகிறோம்.நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவுக்கே இன்னும் SIR படிவம் வரவில்லை.

11 நாட்கள் முடிந்துவிட்டன. எப்படி அத்தனை கோடி மக்களுக்கு விண்ணப்பத்தை விநியோகித்து நிரப்பி வாங்குவீர்கள்? கூட்டணிக்கு இரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கிறோம் என எடப்பாடி எங்களை அழைத்தார். நாங்கள் அது இரத்தினக் கம்பளம் அல்ல, இரத்தக் கம்பளம் என மறுத்துவிட்டோம். யாரோ ரெண்டு கொடியை அவர் கூட்டத்தில் ஆட்டிவிட்டார்கள். உடனே அவருடன் கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டாச்சு என்றார். இப்போது அவரும் உன்னுடன் கூட்டணி இல்லை என தீர்மானம் நிறைவேற்றிவிட்டார்’ என்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசுகையில், ‘4 ஆம் தேதியிலிருந்து SIR விண்ணப்பப் படிவத்தை விநியோகிக்க தொடங்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு வாக்காளருக்கும் 2 விண்ணப்பப் படிவங்கள் வழங்க வேண்டும். ஆனால், கிராமங்களில் ஒரு படிவத்தைத்தான் கொடுத்திருக்கிறார்கள். மீண்டும் போய் கேட்கையில்தான் இன்னொரு படிவத்தைக் கொடுக்கிறார்கள். இந்த ஒழுங்கீனமே நடந்திருக்கக்கூடாது. எங்களின் கூட்டணி கட்சி தலைவர்களுக்கே இன்னும் படிவம் வழங்கப்படவில்லை.தேர்தல் நடக்கும் மாநிலங்களிலெல்லாம் ஜனநாயக படுகொலை செய்கிறார்கள்..

நீங்கள் ஏன் அசாமில் SIR நடத்தவில்லை. அதுதான் சென்சிட்டிவ்வான மாநிலம். அங்கே முதலில் SIR செய்யுங்கள். ஏன் செய்யவில்லை?
வெளிநாட்டு மாடல் அழகிக்கு இந்தியாவில் 22 இடங்களில் வாக்கு இருக்கிறது.
வழக்கமாக தேர்தலுக்கு கடைசி ஒரு வாரத்தில் தீவிரமாக உழைப்போம். ஆனால், இந்த முறை இப்போதிருந்தே கட்சியின் தோழர்கள் வாக்குகளை காப்பாற்ற நீங்கள் தீவிரமாக உழைக்க வேண்டும். தேர்தல் ஆணையம் கொடுக்கும் படிவத்தை பார்த்தால் படித்தவர்களுக்கே தலைசுற்றுகிறது.’ என்றார்