டெல்லி,
கோவா மாநிலத்தின் தலைநகர் பனாஜி அருகே அர்புரா கிராமம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள கடற்கரை பிரபல சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்கு உள்ள பிரபல கேளிக்கை விடுதியில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சுற்றுலா பயணிகள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். கேளிக்கை விடுதியில் சமையல் அறையில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவா கேளிக்கை விடுதி தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், கோவாவின் அர்புராவில் ஏற்பட்ட தீ விபத்தால் மிகுந்த வேதனையடைந்தேன். தீ விபத்தில் உறவுகளை இழந்தவர்களுடன் நான் துணை நிற்கிறேன். படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். நிலைமை குறித்து கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் உடன் பேசியுள்ளேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு தேவையான உதவி செய்து வருகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கோவா கேளிக்கை விடுதி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.