2023 ஜூனில் சந்திரயான் – 3 விண்கலம்.. இஸ்ரோ தலைவர் சோம்நாத் உறுதி!

”நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்கான, ‘சந்திரயான் – 3’ விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் ஏவப்படும்,” என, ‘இஸ்ரோ’ தலைவர் சோம்நாத் தெரிவித்து உள்ளார்.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, ‘சந்திரயான் – 2’ விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, 2019 ஆம் ஆண்டில் விண்ணில் ஏவியது. ஆனால், சந்திரயான் விண்கலத்தின், ‘லேண்டர்’ கலன் தொழில்நுட்பக் கோளாறால் வேகமாக சென்று நிலவின் தரையில் மோதி உடைந்தது.

அதே நேரம், விண்கலத்தின் மற்றொரு பகுதியான, ‘ஆர்பிட்டர்’ நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. அத ன்பிறகு, நிலவை ஆர்பிட்டர் சுற்றிவந்து ஆய்வு செய்வதுடன், பல்வேறு அரிய புகைப்படங்களையும் அனுப்பி வருகிறது.

இந்நிலையில், சந்திரயான் – 2 திட்டத்தில் இருந்து கற்றுக் கொண்ட படிப்பினை, தேசிய அளவிலான நிபுணா்களின் ஆலோசனை அடிப்படையில், நிலவை ஆய்வு செய்ய உருவாக்கப்பட்டுள்ள சந்திரயான் – 3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்து உள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் கூறியதாவது:

நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் – 3 விண்கலம் தயாராக உள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. சந்திரயான் – 2ல் ஏற்பட்ட பிரச்னைகள் இதில் இருக்காது. சந்திரயான் – 3 மிகவும் வலிமையானதாக உருவாக்கி இருப்பதாகவும், விண்கலத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. ஒரு கருவி பழுதடைந்தால் மற்றொரு கருவி அந்த பணியை முன்னெடுத்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே, ஆர்பிட்டர் நிலவை சுற்றி வருவதால், இந்த முறை லேண்டர், ரோவர் விண்கலங்களை மட்டும் அனுப்ப திட்டமிடப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில், நாட்டின் முதல் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ‘ககன்யா’ திட்டத்தின் முதல் பரிசோதனையும் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்திய விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பவும் இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.