தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய்க்கு எந்த அளவு ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறதோ அந்த அளவுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கும் ரசிகர்கள் பட்டாளம் சமீப காலத்தில் அதிகரித்து இருக்கிறது. அதிலும் குறிப்பாக ‘விக்ரம்’ படத்தின் வெற்றிக்கு பின்னர் இவர் மிகவும் எதிர்பார்க்கப்படும் இயக்குனராக மாறிவிட்டார், இந்த நிலையில் இவர் நடிகர் விஜய்யை வைத்து எடுக்கப்போகும் ‘தளபதி 67‘ படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு பெருகியுள்ளது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படம் நல்ல வரவேற்பை பெற்றது, இன்றளவும் ரசிகர்களின் மனதில் ப்ரொஃபஸர் ஜே.டி நிலைத்து நிற்கிறார் அந்தளவிற்கு படம் பலரையும் வெகுவாக கவர்ந்திருந்தது.
தற்போது வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் வாரிசு படத்திற்கு கூட ரசிகர்கள் இவ்வளவு ஆர்வம் காட்டவில்லை, அதிகாரபூர்வ அறிவிப்பே வெளிவராத ‘தளபதி 67’ படத்தை தான் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். ‘தளபதி 67’ படத்தின் அப்டேட்டுக்காக ஏராளமான ரசிகர்கள் காத்திருக்கின்றனர், இப்படம் முழுக்க முழுக்க கேங்ஸ்டர் திரைப்படமாக அமையும் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியானதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். மேலும் இந்த படத்தில் பிரபல நடிகர்களை வில்லனாக நடிக்கவைக்கவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் முன்னரே வெளியானது மற்றும் ‘வாரிசு‘ படத்தின் பணிகள் முடிவடைந்த நிலையில் ‘தளபதி 67’ படத்தின் பணிகளில் கலந்துகொள்வார் என்று கூறப்பட்டது, தற்போது வாரிசு படத்தின் பணிகள் நிறைவை எட்டி வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் ‘தளபதி 67’ குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது, அதன்படி சென்னையில் டிசம்பர் 5ம் தேதியான இன்று ‘தளபதி 67’ படத்தின் பூஜை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெளியாகியுள்ள தகவல்களின்படி, படத்தின் ப்ரோமோ ஷூட்டிங் டிசம்பர் 7 முதல் 9ம் தேதி வரையிலும் நடைபெறும் என்றும், படக்குழு சென்னையில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் மற்றும் காஷ்மீரில் சில காட்சிகளை படம்பிடிக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.