ஈரோடு: தமிழகத்திலேயே முதல் முறையாக ஈரோடு பகுதியில் நடமாடும் மயான சேவை திட்டம் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சியுடன் ரோட்டரி ஆத்மா அறக்கட்டளை இணைந்து 14 ஆண்டுகளாக நடத்தும் மின்மயானத்தில், நகரபகுதிகளில் உயிரிழந்தவர்களின் உடல்கள் எரியூட்டபடுகின்றன. இந்நிலையில் கிராமமக்களுக்கு சேவை அளிக்கும் நோக்கில் நடமாடும் எரியூட்டும் வாகனத்தை அந்த அமைப்பு கொண்டு வந்துள்ளது. இதற்காக கேரளா மாநிலம் திருச்சூரில் 25 லட்சம் ரூபாய் செலவில் தகன மேடை வாகனம் பிரத்யேகமாக வடிவமைக்கபட்டு வாங்கி வரப்பட்டுள்ளது.
கிராமபுறங்களில் ஒதுக்கபடும் இடங்களுக்கு தகன மேடை கொண்டு செல்லப்படும் என்றும் இதனால் எரியூட்டும் செலவு பாதியாகவும், நேரம் பெருமளவு குறைக்கபடும் என்றும் தொண்டு நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர். 60 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நடமாடும் தகன வாகனத்தின் மூலம் சேவை அளிக்கவும், மாநிலம் முழுவதும் இதை விரிவுபடுத்தவும் தொண்டு நிறுவனத்தினர் திட்டமிட்டுள்ளனர்.