திருவண்ணாமலை மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் தாய்-மகன் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் பெரியகல்லப்பாடி புதூர் பகுதியை சேர்ந்தவர் துறை. இவரது மனைவி சித்ரா(48). இவர்களது மகன் விக்னேஷ் (25). இந்நிலையில் நேற்று இரவு விக்னேஷ், இருசக்கர வாகனத்தில் தாய் சித்ரா மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த உறவினரான இந்திராணி(55) ஆகியோரை அழைத்துக் கொண்டு வெறையூரில் இருந்து பெரியகல்லப்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது வெறையூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, எதிர்பாராத விதமாக அவ்வழியாக திருக்கோவிலூர் நோக்கிச் சென்ற அரசு பேருந்து, இவர்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இந்திராணி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து பலத்த காயமடைந்த தாய்-மகன் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே தாய்-மகன் இருவரும் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.