Lover Review: வாவ் மணிகண்டன், ஶ்ரீ கௌரி பிரியா; டாக்ஸிக் காதலை முதிர்ச்சியுடன் அணுகுகிறானா `லவ்வர்'?

`பேரன்பும்’, பெருங்கோபமும் கொண்ட காதலனால் ஒரு காதலி படும் துயரங்களும், முறிந்த காதலைக் காப்பாற்றிக் கொள்ள காதலன் நடத்தும் `போராட்டமும்’தான் இந்த `லவ்வர்’!

பொசஸிவ்னெஸ், தாழ்வு மனப்பான்மை இரண்டும் சேர்ந்த மொத்த உருவமாய் இருக்கும் வேலை தேடும் காதலன் அருண் (மணிகண்டன்). ஐடி வேலை, நண்பர்கள் என வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகரும் காதலி (ஶ்ரீ கௌரி பிரியா). தொடர் சண்டைகளும், கருத்து வேறுபாடுகளும் நிறைந்த இவர்களின் ஆறு வருடக் காதல் என்ன ஆனது என்பதே ‘லவ்வர்’ படத்தின் கதை.

இன்றைய சமூகச் சூழலில் நாம் ‘Toxic Relationship’ என வரையறுக்கும் காதல் எப்படியானது என்பதை மிக அருகில் சென்று படம் பிடிக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் பிரபுராம் வியாஸ். நாயகன், நாயகிக்கு இடையேயான மோதலுக்கான உளவியல் காரணங்களை வலுவாக நிறுவியது, ஆறு ஆண்டுகள் முதிர்ச்சி பெற்ற காதலை அதன் யதார்த்தம் மாறாமல் திரைக்குக் கொண்டு வந்தது எனத் தனது அறிமுக படத்திலேயே கவர்கிறார் இயக்குநர்.

LOVER படத்தில்…

வாழ்க்கையில் எந்தப் பிடிப்பும் இல்லாமல், சுயநம்பிக்கை இழந்து காதலியை எப்போதும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைக்கும் ஆணாதிக்க காதலனாக மணிகண்டன். எப்போது வேண்டுமானாலும் விரக்தியிலும் கோபத்திலும் வெடித்துச் சிதறும் அருணை அவரது தேர்ந்த நடிப்பால் நம் கண்முன் நிறுத்துகிறார். அருணின் பிடியிலிருந்து விலக முடியாமல் சிக்கித்தவிக்கும் காதலி திவ்யாவாக ஸ்ரீ கௌரி பிரியா. மனரீதியாக இந்த உறவில் தான் படும் பாட்டை வசனங்கள் எதுவும் இல்லாமல் கண்களிலேயே கடத்துகிறார். ‘மாடர்ன் லவ்’ வெப்சீரிஸில் அறிமுகமானவர், ‘வெள்ளித்திரையில் தனக்கான முதல் படத்திலேயே இத்தனை முதிர்ச்சியான நடிப்பா!’ என நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார். தமிழ் சினிமாவுக்கு நல்வரவு!

இவர்கள் இல்லாமல் அம்மாவாக வரும் கீதா கைலாசம், டீம் லீடராக வரும் கண்ணா ரவி, தோழிகளாக வரும் நிகிலா சங்கர் மற்றும் ரினி, அருணின் நண்பராக வரும் அருணாச்சலேஸ்வரன் என அனைவருமே அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாக நடித்திருக்கிறார்கள். ‘டாடா’, ‘முதல் நீ முடிவும் நீ’ ஆகிய படங்களில் கவர்ந்த ஹரிஷும் சிறிய வேடம் என்றாலும் மணிகண்டனுடன் உரையாடும் அந்த ஒரு காட்சியில் அப்ளாஸ் அள்ளுகிறார். அதற்கு வசனங்களும் பக்கபலம்.

காதலர்களுக்கு இடையிலான நெருக்கம், பிரிவு, கோபம், ஆற்றாமை என அனைத்தையும் சிறப்பாகப் பதிவுசெய்திருக்கிறது ஷ்ரேயாஸ் கிருஷ்ணாவின் கேமரா. க்ளோசப் ஷாட்கள் மூலம் அவர்களின் காதலுக்கும் உணர்வுகளுக்கும் மிக அருகில் நம்மையும் அழைத்துச் சென்றிருக்கிறார். ஷான் ரோல்டனின் பின்னணி இசையும் படத்துக்குப் பெரிய பலம். திரைக்கதைக்கேற்ப பாடல்களும் நெருடல் இல்லாமல் வந்துபோகின்றன. இரண்டாம் பாதியில் வரும் ஏதேனும் ஒரு மான்டேஜ் பாடலை மட்டும் குறைத்திருக்கலாம். மற்றபடி பரத் விக்ரமனின் எடிட்டிங்கும் கச்சிதம்.

LOVER படத்தில்…

முதல் காட்சியிலேயே, ‘எதுக்கு மறைச்சிட்டுப் போனே… எதுக்கு பொய் சொல்லிட்டுப் போனே?’ என்ற ஒற்றை டயலாக்கில் இருவருக்குமான பிரச்னை என்ன என்பதைக் காட்டிவிட்டு அடுத்தடுத்த தொடர் விளைவுகள் என்ன என்பதாக நகரும் முதல் பாதி முழுக்க சுவாரஸ்யமாகவே இருக்கிறது. ஆனால், இரண்டாம் பாதியில் திரைக்கதை அடுத்தது என்ன என யோசிக்க வைக்காமல் ஒரே புள்ளியில் தேங்கி நின்றுவிடுகிறது. ‘ஒரே ஒரு சான்ஸ் கொடு!’ என சிம்பிளாய் மன்னிப்பு கேட்டுவிட்டுச் செய்த தவற்றையேதான் நாயகன் மீண்டும் மீண்டும் செய்கிறான் என்பதைக் காட்ட நினைத்ததெல்லாம் சரிதான். ஆனால், அதற்காக ஒரே காட்சியையே மீண்டும் மீண்டும் பார்ப்பது போன்ற உணர்வும், லூப்பில் மாட்டிக் கொண்ட அயர்ச்சியையும் நமக்கு ஏற்படுகிறது.

அருணின் கதாபாத்திரத்தை இயக்குநர் எங்கும் ஹீரோவாக போற்றிப் புகழ் பாடவில்லை என்றாலும் அவனது குடும்பத்தில் நிலவும் சிக்கல்கள், அதனால் உண்டாகும் தாக்கம், கரியர் பிரச்னைகள் என நாயகனது குழப்பமான மனநிலைக்குக் காரணமான பல விஷயங்கள் படம் முழுவதும் டீட்டெய்லாகச் சொல்லப்படுகிறது. ஆனால், நாயகி ஐ.டி-யில் வேலை பார்க்கிறார் என்பதைத் தாண்டி அவர் குறித்து நமக்கு எதுவுமே சொல்லப்படவில்லை. போகிற போக்கில் நாயகனே ஓரிடத்தில், ‘அவங்க வீட்டுல தெரிஞ்சா என்னாகும் தெரியுமா ப்ரோ?’ எனக் கேட்கும் இடத்தில்தான், ‘ஆமால்ல… நாயகிக்கு ஒரு குடும்பம் இருக்குல்ல?’ என நாமுமே யோசிக்கிறோம். இதனாலேயே அருண் செய்வது தவறாக இருந்தாலும் அவனுடனே பார்வையாளர்கள் அதிகமாகத் தொடர்புப்படுத்திக் கொள்கிறார்கள். அவனுக்காகவே பரிதாபப்படுகிறார்கள். இதனாலேயே அவன் செய்யும் அபத்தமான விஷயங்களுக்கும் திரையரங்கில் விசில் சத்தம் பறக்கிறது. ஆனால், நாயகியின் உளவியல் போராட்டங்களில் குடும்பம் பற்றிச் சின்ன காட்சிகூட இல்லாதது ஒரு முக்கியமான நெருடல்.

LOVER படத்தில்…

அதேபோல இன்றைய தலைமுறையினரின் வாழ்வியலைக் காட்டுகிறேன் எனப் படம் நெடுக குடி, கும்மாளம், ஜாய்ண்ட் பார்ட்டி கலாசாரம் எனப் பொதுமைப்படுத்தும் விதத்தில் காட்சிப்படுத்தியிருப்பது நம்மையும் ஹேங்-ஓவரில் தள்ளி விடுகிறது. இருவருக்குமான ஆறு வருடக் காதலில் சந்தோஷமான பக்கங்களை சில மான்டேஜுகளில் கடந்திருப்பதும் குறைதான். காதலை ரொம்பவும் ரொமான்டிசைஸ் செய்யாமல், அதீதமான காதல் தரும் வலி, அதைக் கடப்பதற்கான வழிமுறைகள் என யோசித்ததெல்லாம் ஓகேதான். அதை இன்னும்கூட இரு பக்கமும் பேலன்ஸ்டாக நின்று சொல்லியிருந்தால் தமிழ் சினிமாவில் பேசப்படாத பக்கங்களையும் பேசிய முக்கியமான படமாக இது மாறியிருக்கும். அதேபோல க்ளைமாக்ஸில் நாயகன் எடுக்கும் முடிவுக்கான காரணத்தையும் பின்னணியையும் இன்னும் தெளிவாகவே விளக்கியிருக்கலாம்.

LOVER படத்தில்…

தன்னை ஒரு பெண் காதலிப்பதாலேயே `வெறித்தனமா லவ் பண்றேன்’, `அவளைக் கொண்டாடுறேன்’, `உயிருக்குயிராய் நேசிக்கிறேன்’, `அவளுக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்கேன்’, `அவ இல்லைனா நான் செத்துடுவேன்’, `அவளை என் பொண்டாட்டியாத்தான் நினைக்கிறேன்’ என அதீத காதலை வெற்று வார்த்தைகளில் மட்டும் வெளிப்படுத்திக் கொண்டு தன்னுடைய முழுக் கட்டுப்பாட்டிலேயே எப்போதும் அவள் இயங்க வேண்டும் என்று நினைக்கும் Alpha male lover boy-களுக்கு `எதையும் இங்கு யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை’ என்ற மெஸேஜ் சொன்ன விதத்தில் இந்த `லவ்வர்’ கவர்கிறான்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.