ஏழைகள் பற்றி கவலையே இல்லை! – மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்த பட்ஜெட்: ப. சிதம்பரம்..!

மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தது. குறிப்பாக, புதிய வருமான வரி முறையைத் தேர்ந்தெடுத்தோருக்கு 7 லட்ச ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இந்த பட்ஜெட் குறித்து ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்தச் சூழலில் மத்திய பட்ஜெட்டை முன்னாள் நிதியமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப. சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த பட்ஜெட்டில் எந்தவொரு வரி குறைப்பு தொடர்பான அறிவிப்பும் இல்லை என்றும் சிதம்பரம் சாடினார்.

மத்திய பட்ஜெட் பெரும்பான்மையான இந்தியர்களின் நம்பிக்கைக்குத் துரோகம் செய்துவிட்டதாகவும், மக்களிடம் இருந்து அரசு எவ்வளவு தூரம் அந்நியப்பட்டு இருக்கிறது என்பதைக் காட்டும் வகையிலேயே இந்த பட்ஜெட் உள்ளதாக அவர் விமர்சித்தார். மக்களின் வாழ்க்கை, வாழ்வாதாரம் மற்றும் இந்தியாவில் வளர்ந்து வரும் சமத்துவமின்மை கவலை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த பட்ஜெட்டை அபத்தமானது என்று குறிப்பிட்ட அவர், நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் வேலையின்மை, வறுமை, சமத்துவமின்மை போன்ற வார்த்தைகளை எங்கும் குறிப்பிடவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “வேலையின்மை, வறுமை, சமத்துவமின்மை போன்ற வார்த்தைகள் அமைச்சரின் பட்ஜெட் உரையில் இல்லை. நல்ல வேளையாக ஏழை என்ற வார்த்தையை இரண்டு முறை அவர் குறிப்பிட்டுள்ளார். அரசுக்கு யார் மீது அக்கறை உள்ளது.. யார் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை என்பது இதில் தெளிவாகத் தெரிகிறது. எந்தவொரு மறைமுக வரிகளும் குறைக்கப்படவில்லை.. எந்தவொரு ஜிஎஸ்டி விகிதங்களிலும் குறைக்கப்படவில்லை..

பெட்ரோல், டீசல், சிமென்ட், உரங்களின் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு இல்லை.. மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொள்ளாத சர் சார்ஜ், செஸ்கள் குறைக்கப்படவில்லை.. இந்த பட்ஜெட்டால் யார் பலன் அடைந்தார்கள்? நிச்சயமாக, ஏழைகள் இல்லை.. வேலை தேடும் இளைஞர்களுக்கான பட்ஜெட் இது இல்லை.. வேலை இழந்தோர் குறித்த அறிவிப்பு இல்லை.. இல்லத்தரசிகளுக்கு பயன் அளிக்கும் அறிவிப்பு இல்லை.. சமத்துவமின்மையை சரி செய்ய எந்தவொரு நடவடிக்கையும் இல்லை..

புதிய வரி முறையைத் தேர்வு செய்ய இங்குப் பலருக்கும் ஆர்வம் இல்லை. இருப்பினும், பல்வேறு காரணங்களால் அதைத்தான் இவர்கள் முன்னிறுத்துகிறார்கள். இதற்காகப் பல அறிவிப்புகளை அவர்கள் வெளியிடுகிறார்கள். இப்படி புதிய வரி முறையை மறைமுகமாகத் திணிப்பது நியாயமற்றது.. பழைய வரி முறையில் வரி செலுத்துவோர் பெறும் சமூகப் பாதுகாப்பையும் இது பறித்துவிடும்” என்று குறிப்பிட்ட அவர் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது இந்த பட்ஜெட் மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம் செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.