ஆயுள் தண்டனையை ரத்து செய்யவேண்டும்- யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு

மதுரை:
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கொலை வழக்கில், சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவன தலைவர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் என 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மதுரை சிறப்பு  நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர்கள் சாகும்வரை  சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். 5 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மதுரை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தண்டனையை ரத்து செய்யக் கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர். பல ஆண்டுகளாக சிறையில் உள்ளதால், தங்களுக்கான தண்டனையை ரத்து செய்து ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் கூறி உள்ளனர்.
கோகுல்ராஜ் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால் திட்டமிட்டு அவரை கொடூரமாக கொலை செய்து உள்ளதாகவும், இந்த கொலைக்கு உரிய நீதி கிடைத்திருப்பதாகவும் அரசு வக்கீல் மோகன் தெரிவித்திருந்தார். மேலும், விடுதலை செய்யப்பட்ட 5 பேருக்கும் தண்டனை கிடைக்கும் வகையில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.