சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா தாக்கல்- வேந்தர் ஆகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை:
தமிழ்நாட்டில் சித்த மருத்துவம், ஆயுர்வேதா, யுனானி யோகா, ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய துறைகளுக்கென தனி பல்கலைக்கழகம் நிறுவுவது தொடர்பான சட்டமுன்வடிவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். சென்னைக்கு அருகே சித்த மருத்துவ பல்கலைக்கழகம் கொண்டு வரும் வகையில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
தமிழ்நாடு இயல், இசை, கவின் கலை பல்கலைக்கழத்தை தவிர, பிற அனைத்து அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் தற்போது இருந்துவரும் நிலையில், புதிதாக தொடங்கப்படும் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சரும், இணை வேந்தராக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் இருப்பார்கள் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அனைத்திற்கும் முதலமைச்சர் தலைமை வகித்து பட்டங்கள், பட்டயங்கள் அல்லது பிற கல்வி சிறப்பு பட்டங்கள் அனைத்தையும் வழங்குவார் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகள், யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஹோமியோபதி மருத்துவ கல்லூரிகள் அனைத்தும் புதிய பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் எனவும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.