10.69 லட்சம் பாலியல் குற்றவாளிகளின் விவரங்கள் வெளியீடு- மத்திய அரசு

புது டெல்லி:
மத்திய உள்துறை அமைச்சகம், பாலியல் குற்றவாளிகளின் விபரங்கள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் நாடு முழுவதும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு தண்டனைக்கு உள்ளான 10 லட்சத்து 69 ஆயிரம் பேரின் விபரங்கள் அடங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
குழந்தைகள், பெண்களிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்கள், வீட்டு முகவரி, அடையாள அட்டை, கைரேகை பதிவு உள்ளிட்ட தரவுகள் தேசிய பாலியல் குற்றவாளிகள் தரவு இணையதளதில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விவரங்களை பொதுமக்கள் பார்க்க முடியாது. ஆனால் போலீஸ், நீதித்துறை போன்ற சட்ட அமலாக்க அமைப்புகள் இந்த விவரங்களை காண முடியும். இந்த விவரங்களை பயன்படுத்தி சட்ட அமலாக்க அமைப்புகள் பயன்படுத்தி பாலியல் குற்றங்களில் புலனாய்வு மேற்கொள்ளலாம்.
அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, அயர்லாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் மட்டுமே பாலியல் குற்றவாளிகளின் விவரங்களை சேமித்து வைக்கின்றன. இதில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் பாலியல் குற்றவாளிகளின் விபரங்களை பொதுமக்களும் அறியும் வசதி உள்ளது. ஆனால் இந்தியாவில் இந்த வசதி தரப்படவில்லை.
இவ்வாறு மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.