புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து பணிமனை கிளையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தவர், சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டியைச் சேர்ந்த குமார். இன்று வழக்கம்போல் பணிக்குச் சென்ற குமார், சிங்கம்புணரியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப்பேருந்தை இயக்கி சென்றுள்ளார்.
அப்போது மேலைச்சிவபுரி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் குமார், பேருந்தை ஓரமாக நிறுத்தி, பயணிகளின் உயிருக்கு ஆபத்து நேராத வகையில் காப்பாற்றிய பின், பேருந்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்னமராவதி போலீசார், குமாரின் உடலைக் கைபற்றி, பிரேத பரிசோதனைக்காக வலையபட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சக பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.