நம்மில் பலர் நீண்ட தூரங்களுக்கு ரயில் பயணங்கள் மிகச்சிறப்பானதாகவும், பாதுகாப்பானதாகவும் பார்க்கிறோம். ரயிலில் நீண்ட தூர பயணத்தை திட்டமிடுபவர்கள் பலர் உள்ளனர். இனி நாம் செல்ல நாய்களையும் பூனைகளையும் ரயிலில் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
ரயில்வே வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, ஏசி-1 வகுப்பு பெட்டிகளில் நாய்கள் மற்றும் பூனைகளுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கான திட்டத்தை ரயில்வே அமைச்சகம் தயாரித்துள்ளது. செல்லப்பிராணிகளுக்கான முன்பதிவு உரிமையை TTE-க்கு வழங்குவது குறித்தும் ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செல்லப்பிராணிகளை ரயிலில் அழைத்துச் செல்ல பல ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.குறிப்பாக அந்த செல்லப்பிராணிகளுக்குச் சரியான நேரத்தில் தடுப்பூசிகளைப் போட்டதற்கான சான்றிதழ் இருக்க வேண்டும். இது மட்டுமல்ல பயண தேதியிலிருந்து 24-48 மணி நேரத்திற்கு முன்னதாக டாக்டரிடம் எடுக்கப்பட்ட ஃபிட்னஸ் சான்றிதழும் வழங்கப்பட வேண்டும். பயணத்தின் போது தனது செல்லப்பிராணிகளை அழைத்துச் செல்பவர்கள் அதற்கான உணவு, தண்ணீர், செல்லப்பிராணிகளுக்கு பிடித்தமான பொம்மைகளையம் பயணத்தின் போது உடன் வைத்திருக்க வேண்டும்.
பயண நேரத்தில் அது மற்றவர்களைத் தொந்தரவு செய்யாத வகையில் அதன் உரிமையாளர் பார்த்துக்கொள்ள வேண்டும் என விதிமுறை உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் தயாராகி வருகிறது. ஒரு சில நாட்களில் இது வெளியாகும் என எதிர்பார்க்கலாம். மேலும் ஐஆர்சிடிசி செல்லப்பிராணிகளை ரயிலில் அழைத்த செல்ல பிரத்தியேக வெப்சைட் ஒன்றையும் உருவாக்கி வருகிறது. உங்கள் ரயில் பயணத்தில் செல்ல பிராணிகளையும் அழைத்துச் செல்ல விரும்பினால் அந்த வெப்சைட்டில் செல்ல பிராணிகளுக்கான டிக்கெட்டையும் எடுத்துச் செல்ல முடியும்.