மரக்காணம் மற்றும் சித்தாமூரில் விற்கப்பட்டது சாராயம் அல்ல ‘மெத்தனால்’..!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் என்னும் மீனவக் கிராமத்தில், கள்ளச் சாராயம் அருந்திய 13 பேர் பேர் உயிரிழந்தனர். இதைத் தவிர்த்து செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கிராமங்களில் 5 பேர் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தனர். விழுப்புரம் சம்பவத்தில் 66 பேர் தற்போது வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், மரக்காணம் மற்றும் சித்தாமூரில் விற்கப்பட்டது கள்ளச் சாராயம் அல்ல என்றும், தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் மெத்தனால் சேர்க்கப்பட்ட விஷச் சாராயம் என்று காவல் துறை டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மரக்காணம் மற்றும் சித்தாமூரில் பகுதிகளில் கைப்பற்றப்பட்ட சாராயம் தடய ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ஆய்வில் இது மனிதர்கள் அருந்தும் சாராயம் இல்லை என்றும், தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் மெத்தனால் சேர்க்கப்பட்ட விஷச் சாராயம் என்பது தெரியவந்துள்ளது.

இந்த விஷச் சாராயத்தை ஓதியூரைச் சேர்ந்த அமரன் என்பவர் விற்பனை செய்துள்ளார். அவரை கைது செய்து விசாரணை செய்ததில், அவர் முத்து என்பவரிடம் இருந்து வாங்கியதாகவும், முத்து புதுச்சேரி எழுமலை என்பவரிடம் இருந்து வாங்கியதாகவும் கூறியுள்ளார். மேலும், மரக்காணம் மற்றும் சித்தாமூரில் விற்கப்பட்ட விஷச் சாராயங்கள் புதுச்சேரியில் இருந்து வந்தது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சுவது பெருமளவு தடுக்கப்பட்டாலும், அண்டை மாநிலங்களுக்கு கள்ளச் சாராயம் கடத்தப்படுவது தீவிரமாக கண்காணிக்கப்பட்டதாலும், சாராயம் கிடைக்கவில்லை என்ற சூழ்நிலையில், தொழிற்சாலையில் இருந்து விஷச் சாராயத்தை திருடி விற்றுள்ளனர். அதனால், இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. எந்த தொழிற்சாலையில் இருந்து விஷச் சாராயம் வந்தது, இதில் யாருக்கு தொடர்பு உடையது என்று விசாரணை நடைபெற்று வருகிறது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.