உக்ரைன் மீது படையெடுத்துள்ளது ரஷ்யா. அதன் காரணமாக இரு நாடுகளும் போரிட்டு வருகின்றன. அதனால் உக்ரைன் நாட்டில் கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்கள் மற்றும் பணி நிமித்தமாக சென்ற நாட்டு மக்களை ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் பத்திரமாக மீட்டு வரும் பணியை மேற்கொண்டு வருகிறது இந்தியா.
இந்த சூழலில் உக்ரைன் நாட்டிலிருந்து தாயகம் திரும்பிய மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு வாரணாசியில் இன்று நடைபெற்றுள்ளது. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மாணவர்கள் பிரதமரை சந்தித்து தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
மத்திய அமைச்சர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு சென்று, அங்கிருந்த படி நாட்டு மக்களை மீட்கும் பணியை முன்னின்று கவனித்து வருகின்றனர். மேலும் சில அமைச்சர்கள் இந்த பணியில் சேர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய விமானப்படையின் விமானமும் மீட்பு பணியில் ஈடுபடும் என இந்திய அரசு தெரிவித்திருந்தது.
வரும் 10-ஆம் தேதி வாக்கில் சுமார் 80 விமானங்கள் மீட்பு பணியை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் கல்வி பயின்று வந்த கர்நாடக மாணவர் உயிரிழந்துள்ளார். தாயகம் திரும்பியுள்ள மாணவர்கள் உக்ரைனில் கடும் குளிர் நிலவி வருவதாக அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை விரைந்து மீட்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM