எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு ஆப்கானிஸ்தானை பயன் படுத்தக் கூடாது – குவாட் அமைப்பு வலியுறுத்தல்

மெல்போர்ன்:
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்ற குவாட் மாநாடு
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன், ஜப்பான் வெளியுறவுத்துறை மந்திரி யோஷிமாசா ஹயாஷி, ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரி மாரைஸ் பெய்ன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  
இந்தோ – பசிபிக் கடல் பிராந்தியத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த மாநாட்டில், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்தோ – பசிபிக் கடல் பிராந்தியத்தை மற்ற நாடுகளின் ஆக்கிரமிப்பிலிருந்தும், அச்சுறுத்தலில் இருந்தும் பாதுகாப்பது என இந்த மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.
பின்னர் குவாட் அமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் மூலம் எந்த நாட்டையும் அச்சுறுத்துவதற்காக ஆப்கானிஸ்தானை பயன்படுத்தக் கூடாது என்று அவர்கள் வலியுறுத்தினர். 
பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களை பயன்படுத்தும் நாடுகளுக்கு கண்டனம் தெரிவித்தனர். பயங்கரவாதிகளின் பாதுகாப்பு புகலிடங்களை அகற்றவும், பயங்கரவாத வலைப் பின்னல்களை சீர்குலைக்கவும், அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
வெளியுறவுத்துறை அமைச்சர்களின் நான்காவது, குவாட் மாநாடு சிறப்பாக முடிந்தது. பல்வேறு ஆக்கப்பூர்வமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளன என மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார். 
மாநாடு துவங்குவதற்கு முன்னதாக, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனை, ஜெய்சங்கர் உட்பட மற்ற வெளியுறவுத்துறை மந்திரிகள் சந்தித்து பேசினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.