போலீசார் மீது 5 நாய்களை ஏவி விரட்டியடித்த வாலிபர் – தப்பியோடியவரை பிடிக்க நண்பர்கள் 4 பேர் கைது

திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொச்சியை அடுத்த பாலாரி வட்டம் பகுதியை சேர்ந்தவர் விஷால்.
அதே பகுதியை சேர்ந்தவர் அல்தாப். இவர் நேற்று முன்தினம் தனது மனைவியுடன் அருகில் உள்ள மார்க்கெட்டுக்கு பொருள்கள் வாங்க சென்றார். திரும்பி வரும் போது அவர்களை வாலிபர் விஷால் தடுத்து நிறுத்தி தகராறு செய்தார்.
மேலும் அவர்களை தாக்கவும் செய்தார். இதில் படுகாயம் அடைந்த தம்பதியர் இருவரும் பாலாரிவட்டம் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வாலிபர் விஷால் மீது வழக்கு பதிவு செய்தனர்.பின்னர் அவரை தேடி அவரது வீட்டுக்கு சென்றனர். போலீசார் வருவதை கண்டதும் விஷால், தனது 5 வளர்ப்பு நாய்களுடன் வீடு முன்பு நின்றார்.
போலீசார் அருகில் வந்ததும் அவர்கள் மீது நாய்களை ஏவிவிட்டார். நாய்கள் விசாரணைக்கு வந்த போலீசாரை விரட்டியது. இதில் போலீசார் சிலர் காயம் அடைந்தனர்.
இதனால் நாய்களுக்கு பயந்து போலீசார் ஓட்டம் பிடித்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட விஷால், அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகி விட்டார்.
இதையடுத்து போலீசார், தப்பியோடிய விஷாலை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் விஷால் தப்பியோட உதவி செய்ததாக அவரது நண்பர்கள் 4 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.