2-வது முறையாக இணையும் சுசீந்திரன்-ஜெய் கூட்டணி

‘வீரபாண்டியபுரம்’ படத்திற்குப் பிறகு, சுசீந்திரன் – ஜெய் கூட்டணி மீண்டும் புதிய படத்தில் இணைய உள்ளனர்.

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில், கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஈஸ்வரன்’. இந்தப் படத்திற்குப் பின் சுசீந்திரன் இயக்கி, திரையரங்குகளில் நேற்று வெளியாகியுள்ளப் படம் ‘வீரபாண்டியபுரம்’. இந்தப் படத்தில் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், ஜெய்யின் 30-வது படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தில், இசையமைப்பாளராகவும் அவர் அறிமுகமாகியுள்ளார்.

image

இந்தப் படத்தில் மீனாக்ஷி கோவிந்தராஜன், அகான்ஷா சிங், பால சரவணன், காளி வெங்கட், ஜெயப்பிரகாஷ், ஹரிஷ் உத்தமன், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காசி விஸ்வநாதன் எடிட்டிங் செய்துள்ளார். வேல்ராஜ் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். லெண்டி ஸ்டூடியோ சார்பில் எஸ் ஐஸ்வர்யா இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இந்நிலையில், இந்தப் படத்தை அடுத்து, 2-வது முறையாக இயக்குநர் சுசீந்திரன் – ஜெய் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளனர். இதனை இயக்குநர் சுசீந்திரன்,  தனது வீடியோ பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தப் புதிய படத்தின் முழு அறிவிப்புகள் குறித்து, இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.