உக்ரைனில் இருந்து 1,400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளியேற்றம் – இந்திய தூதரகம் தகவல்

கீவ்:
தென்-கிழக்கு உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா நகரிலிருந்து 1,400 க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் வெளியேறும் நடவடிக்கை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக தலைநகர் கீவ்-வில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:
வார இறுதி ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளதால், அனைத்து மாணவர்களும் மேற்குப் பகுதிகளுக்கு பயணம் செய்ய ரயில் நிலையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள்.
உக்ரைன் ரயில்வே  சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. எனவே ரயில் நிலையங்களில் ஒரு பெரிய கூட்டம் காணப்படும் என்பதால் அனைத்து இந்திய மாணவர்களும் பொறுமையாக இருக்க வேண்டும், இணக்கமாக இருக்க வேண்டும்.
இந்திய மாணவர்கள் விசா, பணம், உணவு, குளிர்கால ஆடைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை மட்டும் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எப்பொழுதும் உங்களின் உடமைகள் குறித்து கவனமாக இருங்கள். இவ்வாறு இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான அனைத்து உதவிகளையும் மிகவும் கடினமான சூழலிலும் வழங்கி வருவதாக, உக்ரைன் தூதர் இகோர் பொலிகா தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.