ஆபரேஷன் கங்கா | 3 விமானங்களில் 43 தமிழக மாணவர்கள் உட்பட 550 இந்தியர்கள் நாடு திரும்பினர்

புதுடெல்லி: உக்ரைனில் சிக்கிய சுமார் 550 இந்தியர்களுடன் இன்று மூன்று விமானங்கள் நண்பகலில் மும்பை மற்றும் டெல்லிக்கு வந்தடைந்தன. இதில் வந்த 43 தமிழக மாணவர்களை டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், தமிழ்நாடு அரசு இல்லத்தின் முதன்மை உள்ளுரை ஆணையர் அதுல்ய மிஸ்ரா காத்திருந்து வரவேற்றனர்.

ரஷ்யாவால் நிகழ்ந்த போர் காரணமாக உக்ரைனில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது. இதனால், அவர்கள் அனைவரையும் இந்தியாவிற்கு பத்திரமாக அழைத்து வருவதற்காக ‘ஆபரேஷன் கங்கா’ மீட்பு நடவடிக்கை அமலாகி உள்ளது. இந்த நடவடிக்கையின் கீழ் மத்திய அமைச்சர்கள் மற்றும் அதன் உயர் அதிகாரிகள் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவால் செயல்படுகிறார்கள். இதுவரையில் ஏர் இந்தியாவின் 9 மீட்பு விமானங்கள் இந்தியா வந்தடைந்துள்ளன.

இவற்றில் நேற்று காலை ஒரு விமானம் மும்பையின் சத்ரபதி மகராஜ் சிவாஜி சர்வதேச விமான நிலையத்திற்கு நேரடியாக வந்திறங்கியது. இன்று காலை 7.50 மணிக்கு மும்பை வந்த ஏழாவது விமானத்தில் 182 இந்தியர்கள் பயணித்திருந்தனர். இவர்களில் ஒரே ஒரு மாணவர் மட்டும் தமிழகத்தைச் சேர்ந்தவராக உள்ளார். அவரை தமிழகத்தின் வீடு திரும்ப வைக்க தமிழக அரசு சார்பில் ஆவன செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ருமேனியாவிலிருந்து டெல்லிக்கு எட்டாவது மீட்பு விமானம் இன்று நண்பகல் 1.15 மணிக்கு 180 இந்தியர்களுடன் டெல்லி வந்து சேர்ந்தது. இதில் தமிழகத்தின் இரண்டு மாணவர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தனர்.

தமிழ் மாணவர்களை வரவேற்ற அதிகாரிகள்: மதியம் 2.14 மணிக்கு ஹங்கேரியிலிருந்து வந்த ஒன்பதாவது மீட்பு விமானத்தில் அதிகமாக 41 தமிழக மாணவர்கள் உள்ளிட்ட 185 இந்தியர்கள் இருந்தனர். தமிழர்களை, டெல்லி விமானநிலையத்தில் தமிழகத்தின் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்,விஜயன், தமிழ் நாடு அரசு இல்லத்தின் முதன்மை உள்ளுரை ஆணையர் அதுல்ய மிஸ்ரா, ஆகியோர் வரவேற்றனர்.

மாணவி பேட்டி: இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் வினேச்சியா தேசிய அரசு மருத்துவப் பல்கலைகழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவியான அனுவர்ஷினி கணேஷ் கூறும்போது, ”ஐரோப்பிய எல்லை நாடுகளில் பல வெளிநாட்டு மாணவர்கள் குவிந்துவிட்டதால் நிலைமை மோசமாகி வருகிறது. போக்குவரத்து நெரிசல் காரணமாக நாம் சுமார் 7 கி.மீ தொலைவுக்கு நடக்க வேண்டியதாயிற்று. அங்கு ஐந்து டிகிரியில் வீசும் கடும் குளிருக்கு பாதுகாப்பாகத் தங்குமிடமும் இல்லை. இதனால், பல மணிநேரம் பனிப்பொழிவில் காத்து நிற்கவேண்டியதாயிற்று. கழிவறைகளும் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்து சேர்ந்துள்ளோம். மற்ற நம் மாணவர்கள் எப்படி வந்து சேர்வார்கள் என்பதை நினைத்தாலே வேதனையாக உள்ளது” எனக் கவலையுடன் தெரிவித்தார்.

ஐரோப்பிய நாடுகளின் எல்லைகளில் உக்ரைனில் பயிலும் மற்ற நாடுகளின் மாணவர்களும் குவியத் துவங்கி உள்ளனர். இதில், பாகிஸ்தான், நைஜிரீயா உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர். இம்மாணவர்களுக்கு இடையே பேருந்துகளை பிடிக்கும் மோதலில் தமிழர் உள்ளிட்ட இந்திய மாணவர்கள் மீதும் உக்ரைன் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாகவும் புகார் எழுந்துள்ளது.

இவர்கள் ஒவ்வொருவரும் தலா ரூபாய் ஐந்தாயிரம் வரை பேருந்துகளின் கட்டணமாக அளித்து எல்லைகளுக்கு வந்து சேர்ந்துள்ளனர். இந்த மாணவர்கள் அனைவருக்கு உதவியாக அவர்களை உக்ரைனுக்கு கல்வி பயில அனுப்பிய தனியார் நிறுவனங்கள் அதிகமான உதவிகள் செய்து வருவதாக மாணவர்கள் கூறுகின்றனர். இதுவரையும் மீட்பு விமானங்களில் மொத்தம் 86 மாணவர்கள் இந்தியா வந்துள்ளனர். இதில், இன்று மட்டும் வந்த 43 மாணவர்கள் அடுத்து செல்லும் கோவை, சென்னை மற்றும் திருவனந்தபுரம் செல்லும் விமானங்களில் ஏறி வீடு திரும்புகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.