நாளை அதிகனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

சென்னை:

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினத்திற்கு தென் கிழக்கே 760 கி.மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்த மண்டலம் இலங்கை கடலோரப் பகுதி மற்றும் வட தமிழகத்தை நோக்கி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளது. இது புயலாக மாற வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் நாளை அதிகனமழை பெய்யும். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்யும். நாளை மறுநாள் (5-ந்தேதி) திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பொதுவாக இக்கால கட்டத்தில் மழைக்கான வாய்ப்பு இருக்காது. கோடை வெயிலின் தாக்கம் இந்த மாதம் முதல் அதிகரிக்கத் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு கோடை வெயில் தொடங்குவதற்கு பதில் புயல் சின்னம் உருவாகி உள்ளது.

நாளை அதிகனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’டும், மிக கனமழை மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ அலர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.