தமிழக குழுவை அனுப்ப என்ன தேவை? – பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி

சென்னை:
உக்ரைனில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்டுவர தமிழகம் சார்பில் தூதுக்குழுவை அனுப்ப மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.  
இந்நிலையில், உக்ரைனில் சிக்கித்தவிக்கும் மாணவர்களை மீட்கும் பணியில் மத்திய அரசின் மீட்புக்குழு செயல்படும் வேளையில் தமிழகம் ஒரு தூதுக்குழுவை அனுப்ப என்ன தேவை? என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் அனைத்து மாணவர்களையும் பிரதமர் தலைமையில் உலக நாடுகளே வியக்கும்படி, தாயகம் மீட்கும் நடவடிக்கையை, மத்திய அரசின் மீட்புக்குழு சிறப்பாக செயல்படுத்தும் இந்த சிக்கலான வேளையில் தமிழகம் ஒரு தூதுக்குழுவை அனுப்ப என்ன தேவை?. 
அமெரிக்கா, சீனா, ஜெர்மனி என்று பல உலக நாடுகள் தங்கள் நாட்டு மக்களை மீட்கமுடியாமல் திகைத்து நிற்கும் வேளையில், தூதரக ராஜதந்திரத்தின் மூலம் போர்க்களத்தில் இருந்து நாட்டு மக்களை மீட்கும் ஒரே நாடு இந்தியா மட்டுமே.
உன்னதமான நீட் தேர்வை, அரசியலாக்கி மாணவர்களின் உயிரிழப்புக்கு காரணமாகி, தற்போது மாணவர்கள் பெரிதும் வரவேற்கும் நீட் தேர்வை உக்ரைன் போருடன் சம்பந்தப்படுத்தி, குழப்பத்தை அதிகரித்து வரும் முதலமைச்சர், மாநிலங்களுக்கு சம்பந்தமில்லாத மீட்பு நடவடிக்கையிலும் தலையிட்டு, மாணவர்களின் உயிரோடு விளையாட தி.மு.க. அரசு முடிவு செய்து, இதையும் அரசியலாக்கும் செயல், மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள முன்கள வீரர்களுக்கும், மாணவர்கள் உயிருக்கும் இடையூறாகும் என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.