பி.எஸ்.எப்.வீரர்கள் மீது சக வீரர் துப்பாக்கிச் சூடு- 5 பேர் உயிரிழப்பு

அமிர்தசரஸ்:
பஞ்சாப் மாநிலம் அட்டாரி-வாகா எல்லைக்கு 20 கிலோமீட்டர் தொலைவில்  காசா பகுதியில் 144 வது பி.எஸ்.எப். பட்டாலியன் முகாம் அமைந்துள்ளது. 
இந்த முகாம் வளாகத்தில் இன்று காலை பி.எஸ்.எப். வீரர் சதேப்பா என்பவர், அங்கிருந்த சக வீரர்கள் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளார். 
இதில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒரு வீரர் படுகாயம் அடைந்தார். அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்திய சதேப்பாவும் உயிரிழந்தார். 
எனினும் அவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாரா அல்லது மற்றவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்தாரா என்பது குறித்த விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.
தனது சகாக்கள் மீது சதேப்பா துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணம்  என்ன என்பது குறித்து அதிகாரிகள் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்பவில்லை. 
இந்த சம்பவம் குறித்து நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பி.எஸ்.எப். செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 
எல்லைப் படையின் மூத்த அதிகாரிகளும், பஞ்சாப் காவல்துறையும் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.